இந்தியாவில் ஆட்டோவில் பயணிப்பதை விட விமானத்தில் பயணம் செய்வது மலிவாக உள்ளது என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கடனில் சிக்கி இருக்கும் நிறுவனமான ஏர் இந்தியா, பொதுமக்களின் வரிப் பணத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை நான்கு நிறுவனங்களுக்கு பிரித்து விற்கப்படும். தனியார் நிறுவனங்கள், ஏர் இந்தியாவில் 51 சதவீதத்துக்கு மேலான பங்குகளை வைத்திருக்கலாம். அடுத்த சில வாரங்களுக்குள் பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த அறிவிப்பில் அரசாங்கத்தின் பங்கு எவ்வளவு, சொத்துகள் எவ்வளவு என்பது உள்ளிட்ட நிறுவனத்தின் தகவல்கள் இருக்கும்.
நிறுவனம் யார் வசம் செல்லும் என்னும் தகவல் ஜூன் மாதத்துக்குள் தெரிந்துவிடும். அடுத்தாண்டு வேறு ஒரு நிறுவனம் ஏர் இந்தியாவை இயக்கும். ஏர் இந்தியாவில் அரசாங்கத்தின் பங்கு 49 சதவீதம் அல்லது அதற்கும் கீழ் இருக்கும். இரு நிறுவனங்கள் ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இண்டிகோ நிறுவனம் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனம் ஒன்றும் வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறது. ஆனால் அந்த நிறுவனம் குறித்து தற்போது தெரிவிக்க இயலாது.
ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒப்பிட்டால் ஆட்டோ பயணத்தை விட விமானப்பயணம் மலிவாக உள்ளது. இது முட்டாள் தனமான கருத்து என சிலர் கூறினாலும், இதுதான் உண்மை" என்று ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.
மேலும், சாதாரண ரப்பர் செருப்பு அணிந்தவர் கூட விமானத்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜெட்லி கூறியதையும் சின்ஹா சுட்டிக்காட்டினார்.