உள்ளூர் விமானப் பயணிகளுக்கு பல்வேறு குவாரண்டைன் நெறிமுறைகள் குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுத்தன என்று விமானத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார். இதன் விளைவாக, மக்களிடம் விமானப் பயணத்திற்கான தேவைகள் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, கடந்த மே 25-ல் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த மக்கள் (அ) அவசரகால சூழ்நிலையில் இருப்பவர்கள் மட்டுமே விமானப் பயணங்களை தேடுகின்றனர். குவாரண்டைன் தொடர்பான நெறிமுறைகள் தெளிவற்ற தன்மையில் இருப்பதாலும், அவ்வப்போது மாற்றப்படுவதாலும், மற்ற வகுப்பு வாடிக்கையாளர்கள் விமானப் பயணங்களை தவிர்த்து வருவதாக என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா தெரிவித்தார்.
உள்நாட்டு விமானப் பயணங்கள் மறுதுவக்கம் செய்யப்ப்பட்ட முதல் ஏழு நாட்களில், நாடு முழுவதும் குறைந்தது 30 அறிகுறியற்ற விமானப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கோவா, கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்கள் தங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கின. உதாரணமாக, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய டெல்லி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் பயணிகள் ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என மாற்றியது. '
கோவா மாநிலம் விமானப் பயணம் தொடர்பான தனது நிலையான இயக்க நடைமுறை (SOP) இரண்டு முறை மாற்றியது. மறுபுறம், கேரளா வணிக ரீதியாக ஏழு நாட்கள் வரை மாநிலத்தில் தங்கும் விமானப் பயணிகள் இ- பாஸ் வாங்கினால் போதும் என்று தெரிவித்தது.
ஆன்லைன் விமான டிக்கெட் முன்பதிவு நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,டெல்லி, கோவா, பெங்களூரு போன்ற விமானங்களின் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கோரிக்கைகள் தற்போது அதிகரித்துள்ளதக தெரிவித்தார். மேலும், "இந்த வகையான கோரிக்கைகள் பெரும்பாலும் பிசினஸ் கிளாஸ் பயணிகளிடம் இருந்து தான் வருகிறது. இரண்டு நாள் பயணத்திற்காக அவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் செலவிட விரும்புவதில்லை”என்று தெரிவித்தார்.
ரோனோஜோய் தத்தா மேலும் கூறுகையில், "வருவாயில் ஒரு மோசமான பாதிப்பு இருப்பதை நான் தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன். பொதுவாக, பயணிப்பவர்கள் மனதில் இருக்கும் பயம் எவ்வளவு ஆழமானது என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். அதற்கு அடுத்தப்படியாக, பலவீனமான பொருளாதாரம். வாடிக்கையாளர்கள் பயணிக்க விரும்பினாலும், தற்போதைய பொருளாதார சூழல் விமானப் பயணங்களின் தேவையைக் குறைக்கும் வகையில் உள்ளது. மூன்றவதாக,நோய்த் தொற்று கட்டுப்பாடுகளின் நிச்சயமற்ற தன்மை. உதாரணமாக, கர்நாடகாவில் என்ன நடைமுறை? கேரளா மாநிலம் எதை அனுமதிக்கும்? தமிழகம் எதை அனுமதிக்காது? போன்ற கேள்விகளுக்கான பதில் மக்களிடம் தெளிவாக இல்லை" என்று தெரிவித்தார்.
கொரோனா பொது முடக்கநிலையால் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்வையிட பயணிப்பவர்களை நம்பிதான் இந்த துறை தற்போது இயங்கி வருகிறது. கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய காலங்களில் 70 சதவீத விமானப் போக்குவரத்து பிசினஸ் கிளாஸ் மக்களைக் கொண்டிருந்தது என்றும் தத்தா தெரிவித்தார்.