கடந்த புதன்கிழமை, ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், இந்து சேனா தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) மற்றும் அஜ்மீர் தர்கா கமிட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மிகவும் புகழ் பெற்ற அஜ்மீர் ஷெரீப் தர்காவில் சிவன் கோயில் இருப்பதாகவும், அங்கு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் இந்து சேனா வழக்கு தொடர்ந்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக, அஜ்மீர் தர்கா துணைக்கண்டத்தின் மிக முக்கியமான சூஃபி தளங்களில் ஒன்றாக உள்ளது.
அதன் கலாச்சார, வரலாற்று மற்றும் ஆன்மீக சம்பந்தம் காரணமாக, இது அரசியல் ரீதியாகவும் முக்கியமானது. ஜனாதிபதிகள், பிரதமர்கள் இங்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். அதோடு க்வாஜா மொய்னுதின் சிஷ்டியின் நினைவாக கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. அப்போது அவர்கள் சதர்களை (சடங்கு பிரசாதமாக தாள்கள்) அனுப்புகின்றனர். க்வாஜா மொய்னுதின் சிஷ்டி இந்தியாவில் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் சூஃபி துறவிகளில் ஒருவர் ஆவர்.
பிரதமர் நரேந்திர மோடியும் உர்ஸ் திருவிழாவின் போது அஜ்மீர் தர்காவுக்கு சதர்களை அனுப்புவது வழக்கமாக கொண்டுள்ளார்.
சூஃபித்துவம் அமைதி, சகவாழ்வு, இரக்கம் மற்றும் சமத்துவத்தின் குரல்; உலகளாவிய சகோதரத்துவத்திற்கான அழைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரானது என பிரதமர் கூறினார்.
“தர்கா 800 ஆண்டுகளாக உள்ளது… ஜவஹர்லால் நேரு தொடங்கி பிரதமர்கள் சாதர்களை அனுப்பியுள்ளனர்,” என்று AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.
மதத் தலங்களின் நிலையை முடக்கும் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கீழ் நீதிமன்றங்கள் ஏன் கடைப்பிடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆகஸ்ட் 15, 1947-ல் அவை இருந்தன.
ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், “உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் அங்கு (அஜ்மீர் தர்கா) சதர்களை வழங்குகிறார்கள். மேலும் (ஜவஹர்லால்) நேரு, (அடல் பிஹாரி) வாஜ்பாய் முதல் மோடி வரை பிரதமர்கள் சாதர்களை வழங்கியுள்ளனர், அதற்கு ஒரு அர்த்தம் உள்ளது.
எனவே, நீங்கள் சாதர் வழங்குகிறீர்கள், உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இது என்ன மாதிரியானது?" பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் சமூகங்களுக்கு இடையே இடைவெளியையும் வெறுப்பையும் உருவாக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இது குறித்து ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறுகையில், “நீதிமன்றத்தில் இவ்விவகாரங்கள் இருப்பதால் நான் கருத்து கூற விரும்பவில்லை, ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி, அனைவரும் இவ்விவகாரத்தில் இனி எந்த சர்ச்சையையும் உருவாக்க கூடாது என்றுள்ளனர்.
முகலாய ஆட்சியின் போது சேதமடைந்த அல்லது கையகப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளுக்கு இந்தியா முழுவதும் உதாரணங்கள் உள்ளன. நீதிமன்றங்கள் முடிவை வழங்கியுள்ளன, மேலும் சில கட்டமைப்புகளை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம் என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: Modi to Nehru, Obama to Musharraf — a look at Ajmer Sharif Dargah’s enduring political, cultural resonance
அஜ்மீர் வடக்கு எம்.எல்.ஏ.வும், சட்டசபை சபாநாயகருமான வாசுதேவ் தேவ்னானி கூறுகையில், ''நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். நீதிமன்றங்கள் மூலம் தீர்ப்பளிக்கப்பட்ட இதுபோன்ற பிற (வழக்குகள்) உள்ளன. இதில் அரசியல் செய்ய வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.