புதுச்சேரியில் மே 20-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்; அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவு

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு; புதுச்சேரியில் 20 ஆம் தேதி பந்த் நடத்த கூட்டத்தில் முடிவு

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு; புதுச்சேரியில் 20 ஆம் தேதி பந்த் நடத்த கூட்டத்தில் முடிவு

author-image
WebDesk
New Update
puducherry union

நாடு தழுவிய அளவில் மே 20 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி அலுவலகத்தில் இன்று (மே 3) நடைபெற்றது.

Advertisment

இக்கூட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில கௌரவ தலைவர் அபிஷேகம், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, மாநில பொருளாளர் அந்தோணி, சி.ஐ.டி.யு மாநில செயலாளர் சீனுவாசன், மாநிலத் தலைவர் பிரபுராஜ்,  தினேஷ்குமார், ஐ.என்.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன், மாநில துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாநில பொதுச்செயலாளர்  தமிழ்ச்செல்வன், எல்.பி.எஃப் மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், மாநில தலைவர் அங்காளன், மாநில துணை அமைப்பாளர் மிஷோல், ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில பொதுச் செயலாளர் புருஷோத்தமன், எல்.எல்.எஃப் மாநில செயலாளர் செந்தில், எம்.எல்.எஃப் மாநில செயலாளர் வேதா வேணுகோபால், என்.டி.எல்.எஃப் மாநில தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் மே.20 ஆம் தேதி புதுச்சேரியில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்- பந்த் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும் வேலை நிறுத்த பந்த் போராட்டத்தினை விளக்கி கோரிக்கை விளக்க கருத்தரங்கம் (06-05-2025) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் சுதேசி மில் அருகில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கத்தில் புரட்சி பாடகர் கோவன் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வேலை நிறுத்த பந்த் போராட்டத்தினை விளக்கி மே 15, 16, 17 மூன்று தேதிகளில் வேன் பிரச்சாரம் நடைபெறும்.

மே 20 ஆம் தேதி பந்த், மறியல் போராட்டம் ராஜா தியேட்டர், சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், காரைக்கால் ஆகிய மையங்களில் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டத்திற்கு பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

இந்திய நாட்டிலுள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்புகள் (18.03.2025) அன்று இந்திய தலைநகர் டெல்லியில் கூடி தொழிலாளர்களின் தேசிய பேரவை கூட்டத்தை (National Convention of Workers) கூட்டின. 

இந்த பேரவை கூட்டம் இந்திய உழைக்கும் மக்கள் சந்திக்கக்கூடிய பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளது. அப்போது, தொழிலாளர்கள் சார்பாக தனித்தும் கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்து (20.05.2025) அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

இப்போராட்டத்தை புதுச்சேரியில் முழு வெற்றியடைய செய்வதற்காக கூடிய அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்பின் புதுச்சேரி மாநில கூட்டம், இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு புதுச்சேரி மாநில தொழிலாளர்களின் நலனை முற்றாக புறக்கணிப்பதையும் விவாதித்து புதுச்சேரி அரசை வலியுறுத்தும் கோரிக்கைகளையும் இணைத்து (20.05.2025) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, மே 20 புதுச்சேரியில், வேலை நிறுத்தம், முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்:

1). புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிடு! 

2). அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 மாதம் ஒன்றிற்கு நிர்ணயம் செய்திடு!

3). ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டு. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு!

4). அமைப்புசாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9000 மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்திடு. வீடு சார் தொழிலாளர்கள், தாள் சேகரிக்கும் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், திட்டம் சார் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், கடை நிறுவன தொழிலாளர்கள், சுமை பணி தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், கார், ஆட்டோ, டாக்ஸி தொழிலாளர்கள், மீனவ சமூகத்தினர் ஆகியோரை பதிவு செய்து ஓய்வூதியம் உட்பட சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கிடு!

5). பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமுலாக்கு!

6). போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்றவைகளுக்கு உள்ள உச்சவரம்பை நீக்கு. பணிக்கொடை தொகையை அதிகப்படுத்து!

7). விண்ணப்பித்த 45 நாட்களுக்குள்ளாக தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கு!

8). விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்திடு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைத்திடு, உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தி, பொது விநியோக திட்டத்தை பரவலாக்கு! 

9). பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள், தனியார் மயத்தை நிறுத்திடு, தேசிய பண மீட்டல் திட்டத்தை (NMP) ரத்து செய், தற்போது உள்ள சுரங்க சட்டத்தை திருத்திடு, நிலக்கரி சுரங்கங்கள் உட்பட சுரங்கங்களின் 50% லாபத்தை ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட உள்ளூர் சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கிடு!

10). விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை C2 + 50 என்ற முறையில் நிர்ணயம் செய். விவசாயிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்று!

11). மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்பப் பெறு! மின்சாரத்தை தனியார்மயமாக்காதே! ஸ்மார்ட் மீட்டர் முறையை கைவிடு!

12). வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கு! காலிப் பணியிடங்களை நிரப்பு! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்து!

13). கல்வி, மருத்துவம், தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உரிமையாக்கு! புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறு!. அனைவருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்திடு!  

14). வன உரிமைச்சட்டத்தை கடுமையாக அமுலாக்கு! 2023 - வனப் பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றிடு!

15). கட்டட தொழிலாளிக்கும் இ.எஸ்.ஐ திட்டத்தை விரிவுபடுத்து!. புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தை வலிமைப்படுத்து! 

16). பெரும் செல்வந்தர்களுக்கு வரி விதித்திடு, கார்ப்பரேட் வரியை அதிகப்படுத்திடு, சொத்து வரி மற்றும் பரம்பரை வரியை மீண்டும் கொண்டு வந்திடு!

17). அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நிறுத்து!. கருத்துரிமை, மதச் சுதந்திரம், பன்முக கலாச்சாரம், கூட்டாட்சி முறை  மீதான தாக்குதலை நிறுத்து!.

18). புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை உரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தி ஊக்கப்படுத்திடு!

19). புதுச்சேரி அரசு 2024 ஆம் ஆண்டு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்திடு.

20). மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் மற்றும் செயல்படாமல் உள்ள பாசிக், பாப்ஸ்கோ போன்ற அரசு சார்பு நிறுவனங்களை திறந்து திறன் பட நடத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடு!

21). அரசு பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், முகமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடு!

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: