டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் நேற்று (ஆகஸ்ட் 7) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நடைபெறும் முதல் நேரடி கவுன்சில் கூட்டம் இதுவாகும். கடந்தாண்டு காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 23 மாநில முதலமைச்சர்கள், 3 துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். பீகார், தமிழ்நாடு, தெலங்கானா, டெல்லி, கர்நாடகா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை. விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல், பயிர் பல்வகைப்படுத்தல், தேசிய கல்விக் கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரையில் G20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்கிறது. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு உலகிற்கு முன்மாதிரியாக உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய மோடி, "ஒவ்வொரு மாநிலமும் தொழில் வளர்ச்சி, சுற்றுலா, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருந்தாலும், இதனை மேலும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கும் இது முக்கியமானதாகும்" என்று பேசினார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய மோடி, பல ஆலோசனைகளுக்குப் பிறகே இந்தக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி கூறுகையில், "பல மாநிலங்கள் விவசாயி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை, ஜிஎஸ்டி மறுஆய்வு மற்றும் ஒதுக்கீடு அதிகரிப்பு குறித்து பேசினர்.
பயிர் பல்வகைப்படுத்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போது 50 சதவீதம் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுகிறது. வரும் ஆண்டுகளில் 25 சதவீதமாக குறைக்க வேண்டும். சில பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தற்போது 7-8 சதவிகிதமாக குறைந்துள்ளது" என்று தெரிவித்தார்.