சிறுவனை கட்டாயப்படுத்தி வாய்வழி உறவில் ஈடுபட்ட குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் குறைத்து வழங்கியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் சிறிய அளவிலான வாய்வழிப் பாலுறவு "ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமை" என்று கருதுகிறது, ஆனால் இது பிரிவு 6 இன் கீழ் கடுமையான தண்டனை கிடைக்கக்கூடிய "மோசமான ஊடுருவல் பாலியல் வன்கொடுமை" என்று கருத முடியாது, என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜான்ஸி மாவட்டத்தைச் சேர்ந்த சோனு குஷ்வாஹா, 10 வயது சிறுவனுக்கு ரூ.20 ரூபாய் ஆசைகாட்டி அவருடன் வாய்வழியாக பாலியல் உறவு கொண்டதோடு வெளியே கூறினால் கொடூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சோனு குஷ்வாஹா மீது ஐபிசி பிரிவு 377, 506, போக்ஸோ சட்டம் ஆகியவை கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜான்ஸி விசாரணை நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் 5-வது பிரிவின்படி, மோசமான பாலியல் வன்கொடுமை என குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்படட சோனு குஷ்வாஹா தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அனில் குமார் ஓஹா நேற்று தீர்ப்பளித்தார். அதில், “போக்ஸோ பிரிவு 5/6 மற்றும் 9 (எம்) பிரிவில் எந்தவிதமான குற்றத்தையும் குற்றம்சாட்டப்பட்டவர் செய்யவில்லை. ஊடுருவல் பாலியல் கொடுமைதான் வழக்கில் நடந்துள்ளது. இந்த வழக்கில் போக்ஸோ பிரிவு 4இன் கீழ் மோசமான பாலியல் துன்புறுத்தல் என்பது வராது. ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைக்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் மற்றொரு போக்ஸோ வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமீபத்தில் கண்டித்த உச்ச நீதிமன்றம் போக்ஸோ சட்டப்படி, உடலோடு, உடல் தொடர்பு ஏற்பட்டால்தான் நடவடிக்கை என்ற அர்த்தமில்லை. பாலியல் வன்கொடுமைகள் நடக்க காரணமாக இருப்பதே பாலியல் நோக்கம்தான். சட்டத்தின் நோக்கம் என்பது குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்செல்வதாக இருக்காது என்று கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil