அமர்நாத் சன்னதிக்கு அருகிலுள்ள முகாமில் வெள்ளிக்கிழமை, மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலை 6 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது, மேலும் திடீர் வெள்ளம் முகாமின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது, இதில் குறைந்தது 25 கூடாரங்கள் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
மண்டல ஆணையர் (காஷ்மீர்) கே.பாண்டுரங் போலே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: முகாமில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அனந்த்நாக் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் யாத்திரை இரவு முழுவதும் நிறுத்தப்பட்டது.
முகாம்களில் தகவல் தொடர்பு மற்றும் மின்சார விநியோகம் செயல்படுகின்றன. முகாமில் சுமார் 3,000 பேர் தங்கியுள்ளனர். பெரும்பாலான யாத்ரீகர்கள் மலையேற்றத்தில் இருந்தபோது அல்லது இரவு உணவிற்குச் செல்லும் போது மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது, ”என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீர் போலீஸ், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பாதுகாப்புப் படையினரால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐஜிபி (காஷ்மீர்) விஜய் குமார் கூறினார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
உயிரிழந்தோர் குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு "எல்லா உதவிகளும் செய்து தரப்படுகிறது" என்றார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், "யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்" வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.
யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்” என்று சின்ஹா கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி யாத்ரீகர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர்.
அமர்நாத் ஆலய வாரியம்’ யாத்ரீகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஹெல்ப்லைன்களை அமைத்துள்ளது. இந்த யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி 43 நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இது ஏற்பாடு செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.