இந்தியாவில் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க, பாபாசாகேப் அம்பேத்கர் திட்டம் ஒன்றினை கொண்டிருந்ததாக, அம்பேத்கரின் பிறந்த நாளான நேற்று இந்திய தலைமை நீதிபதி ஷரத் போப்டே அரசு விழாவில் பேசி உள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் அமைந்துள்ள, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வகுப்பறை கட்டடங்கள் தொடக்க விழாவில், இந்திய தலைமை நீதிபதி ஷரத் போப்டே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
அந்த விழாவில் பேசிய தலைமை நீதிபதி ஷரத் போப்டே, ‘இந்தியாவில் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க, பாபாசாகேப் அம்பேத்கர் திட்டம் ஒன்றினை கொண்டிருந்ததார். பின், அவரின் இந்த திட்டம் நாளடைவில் நீர்த்துப் போனது. நான், மராத்தி அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என யோசித்தேன். எந்த மொழியில் பேச வேண்டும் என்பது குறித்தான குழப்பம், நீண்ட நாள்களாக நம் நாட்டில் நிலவி வருகிறது. நீதிமன்றங்களின் அலுவல் மொழி தொடர்பான பிரச்னை அடிக்கடி எழுவதை நான் கவனித்து வருகிறேன்.
அதிகாரப்பூர்வ மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உயர்நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சிலர், தமிழ்,, தெலுங்கு என நீதிமன்ற அலுவல் மொழியாக அவரவர் தாய்மொழியை விரும்புகிறார்கள். இந்த சர்ச்சைக்குரிய விசயத்தை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த சிக்கல்கள் ஏற்படாதவாறு இருக்கவே, அம்பேத்கர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கும் திட்டத்தை முன் மொழிய இருந்தார்.
ஆனால், இந்த முன்மொழிவு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால், அம்பேத்கரின் சமஸ்கிருத முன்மொழிவில், இந்தியாவின் அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டதோடு, அவரின் கையொப்பமும் இருந்ததாக’, அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய போப்டே, ‘வட இந்தியர்கள் தமிழ் மொழியையும், தென்னிந்தியர்கள் இந்தியையும் ஏற்க மாட்டார்கள் என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது. இந்த சூழலில், சமஸ்கிருதத்தை இருவருமே ஏற்க மாட்டார்கள் என்ற காரணத்தால் தான் இந்த முன்மொழிவு வெற்றிப் பெறாமல் இருந்திருக்கலாம்.
அம்பேத்கர் சட்டத்தில் மட்டும் நிபுணத்துவம் படைத்தவர் அல்ல. சமூகம் மற்றும் அரசியல் ரீதியாகவும் சமகால சூழலில், என்ன நடக்கிறது என்பதை கவனித்தவர். மக்கள் எதை விரும்புகிறார்கள், ஏழைகள் எதை விரும்புகிறார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால் தான், அவர் இந்த திட்டத்தை நினைத்திருந்தார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கடைசியில், ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றப்பட்டது. எனவே, இது தேசிய சட்ட பல்கலைக்கழகம் என்பதால், நான் ஆங்கிலத்தில் பேசுவேன், என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil