கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதட்டங்களைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவற்ற நிலையில் உள்ளன. இதனிடையே, எல்லைக் கட்டுப்பாடு பகுதிகளில் சீனா தனது துருப்புகளை குவித்து வருவதாக வந்த தகவலையடுத்து, இந்திய ராணுவம் உத்தரகான்ட் மாநிலத்தின் எல்லைக் கோட்டு பகுதியில் தனது இருத்தலை அதிகரித்து வருகிறது.
மேற்கு எல்லையின் ஒரு பகுதியாக இருக்கும் கிழக்கு லடாக்கில், இந்திய ராணுவம் தனது படையை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பயன்படுத்தி சீன துருப்புகளின் அசைவுகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தீவிரபடுத்தியது.
குல்தோங் பகுதியில் சீனத் துருப்புக்கள் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து,மிடில் செக்டாரின் ஒரு பகுதியான உத்தரகண்ட் மாநில எல்லை பகுதியில் இந்திய இராணுவம் தனது இருப்பை அதிகரித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு லடாக்கில், ஆளில்லா வான்வழி வாகனங்களை இயக்க கூடுதல் பிரிவினரை இராணுவம் சேர்க்கத் தொடங்கியுள்ளது. "கரடுமுரடான நிலப்பரப்பு என்பதால்,இப்பகுதியில் வழக்கமான ரோந்து பணிகள் மேற்கொள்வது எளிதல்ல. அதிகப்படியான நேரமும், வீரர்களின் உழைப்பும் வீணாகும். எனவே, இங்கு ஆளில்லா விமானங்கள் பொருத்தமானதாக இருக்கும். இதன்மூலம், லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுபாட்டுப் பகுதியில் எந்தவொரு சீன ஊடுருவலையும் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போர்ப்பிரிவு மையத்தின் வெளியில் இருந்து சில ராணுவ சிறப்புப் பிரிவுகள் நகர்த்தப்பட்டுள்ளது. மற்ற துருப்புக்கள் "லூப்" பட்டாலியன்களிலிருந்து நகர்த்தப்பட்டுள்ளது. சியாச்சின் போன்ற உயரமான பகுதிகளில் நிறுத்தபடாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள காலாட்படையை லூப் பட்டாலியன்கள் என்று பொருள் கொள்ளப்படும்.
லடாக்கின் சில பகுதிகளில் கூடுதல் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரி கூறினார். சர்ச்சைக்குரிய பகுதியில் சீன ராணுவத்தின் விதிமீறல்களை தடுக்க இந்த முடிவு முக்கியமானதாகும். "நிலப்பரப்பு, சீன ராணுவத்தின் படை குவிப்பு, எங்கள் மூலோபாய பாதிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ராணுவம் படையைக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில், அமைந்துள்ள 255 கி.மீ தூரமுள்ள டார்புக்-ஷியோக்-தவுலத் பேக் ஓல்டி (டி.எஸ்.டி.பி.ஓ) சாலை இந்தியாவின் முக்கிய “மூலோபாய சொத்தாக கருதப்படுகிறது. இது கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இந்த சாலையின் மூலம் தவுலத் பெக் ஓல்டி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய விமானப்படையின் மேம்பட்ட லேண்டிங் மைதானத்தை எளிதாக அணுக முடியும்.
உண்மையாக, இந்த சாலையின் கட்டுமானம் 2001 இல் தொடங்கப்பட்டது. ஆரம்ப சீரமைப்பு பொருத்தமற்றது எனக் கண்டறியப்பட்ட பின் இந்த 255 கி.மீ சாலை, ஷியோக் மற்றும் டாங்சே நதிகளில் அருகே செல்லும் விதமாக மறுசீரமைக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதத்தில், ஷியோக் ஆற்றின் மீது கட்டப்பட்ட 1400 அடி பாலத்தை இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்ததன் மூலம் இந்த சாலை செயல்படத் தொடங்கியது. இதை, அதிகாரப்பூர்வமாக கர்னல் செவாங் ரிஞ்சன் சேது என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலம் கரகோரம் மற்றும் சாங் சென்மோ எல்லைகளுக்கு ஒரு இணைப்பாக உள்ளது. மேலும், இந்த பாலம் கால்வான் மற்றும் ஷியோக் நதிகள் சங்கமிக்கும் பகுதி வடக்கே அமைந்துள்ளது. கால்வான் பள்ளத்தாக்கு இந்திய- சீன எல்லைக் கோடு பகுதிக்கு அருகே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.