மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயம் என்ற வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டநிலையில், தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையின்படி, மூன்று மொழி கொள்கையை கடைபிடிக்க மாநிலங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, இந்தி பேசாத மாநிலங்களிலும், இந்தி மொழி கற்பிக்கப்பட வேண்டும் எனவும், அதேபோல,இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மும்மொழி கொள்கைக்கு, தமிழகம், கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
#stophindiimposition,#TNagainsthindiinposition போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து டிரெண்டிங் ஆக்கினர்.
இந்நிலையில், தேசிய கல்விக்கொள்கை வரைவுஅறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில், 3வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தப்பட்ட வரைவு கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 3வது மொழியாக, இந்தி மொழி கட்டாயமாக கற்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.