உலகின் மிக தொன்மையான தமிழ் மொழியை படிக்காததற்காக வெட்கப்படுவதாக, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐஐடி நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, மாணவர்கள் மத்தியில் பேசிய போது தமிழ் குறித்து பேசினார். உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம் என பேசினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய போது, நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு நான் பேசும்போது தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி என்று சொல்லியிருக்கிறேன். அதுதான் அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மோடியின் பேச்சைக்குறிப்பிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரும், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா டுவிட் செய்துள்ளார். அதில், ஐநாவில் பேசிய மோடி உலகின் பழமையான மொழி என்று தமிழைக் குறிப்பிட்டார். அதுவரையிலும் அதை தெரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். அந்த உண்மை எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தமிழ் மொழியின் பெருமையை இந்தியா முழுவதும் நாம் பரப்ப வேண்டும். நான் ஊட்டி உள்ள பள்ளியில் படித்தேன். அப்போது நான் தமிழை படித்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எனது பள்ளித் தோழர்களிடமிருந்து, துஷ்பிரயோகம் செய்யும் சில வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன் என டுவிட்டர் பதிவில் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.