Sreenivas Janyala
கடந்த 2011-ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய ஜெகன்மோகன் ரெட்டி 8 ஆண்டுகளில் ஆந்திராவின் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.
இதற்கு மிக முக்கியக் காரணமானவர் பி.கே எனப்படும் பிரசாந்த் கிஷோர். தேர்தல் வித்தகர் எனப்படும் இவர் 2012-ல் குஜராத் சட்டமன்ற தேர்தல் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார்.
இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அமர்ந்து ஜெகன் மோகனும், பிரசாந்த் கிஷோரும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மே 2017-ல் ஜெகனின் ஸ்பெஷல் அட்வைசராக நியமிக்கப்பட்டார் பிரசாந்த். இதனைத் தொடர்ந்து அவரது குழுவைச் சேர்ந்த 400 உறுப்பினர்கள் ஆந்திராவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கள ஆய்வைத் தொடங்கினர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து எனும் வடிவில் சந்திரபாபுவை வீழ்த்தத் தயாரானார்கள் ஜெகனும் பிரசாந்தும். பிரஜா சங்கல்ப யாத்ரா எனும் என்ற பேரணியின் மூலம் 15 மாதங்களில் 3000 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்தார்கள்.
ஆந்திர மாநிலத்திற்கான சிறப்புப் பிரிவை பெற முடியவில்லையா என அவ்வப்போது நாயுடுவை பலமாக சீண்டி வந்தார் ஜெகன். ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம் எனக் கூறிவிட்டு தற்போது ஏமாற்றும் பாஜக-வுடன் நாயுடு இணக்கமாக இருப்பதாகவும் ஜெகன் விமர்சித்தார்.
தவிர, பெரும்பாலும் பிரசாந்த் வகுத்துக் கொடுக்கும் தேர்தல் வியூகங்களை தவிர்க்காமல் பின்பற்றிய ஜெகன் தற்போது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 175-ல் 151 இடங்களை கைப்பற்றினார்.
பிரஜா சங்கல்ப யாத்ரா பேரணியின் மூலம் 2 கோடி மக்களை நேரடியாகவும் சந்தித்தார். அதோடு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தனித்தனியாக 60000 கடிதங்களை அனுப்பினார்.
கடந்த 2 வருடங்களாக மக்களை ‘டோர் டூ டோர்’ சந்தித்தனர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள். களப்பணியைத் தவிர டிஜிட்டல் புரொமோஷன்களும் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் ஆந்திரா முழுக்க தன்னார்வலர்களைக் கொண்ட நெட்வொர்க்கும் பலப்படுத்தப்படும். ’த டீம் ஜெகண்ணா’ என்ற ஆப் மூலம் ஆயிரக் கணக்கான தன்னார்வலர்கள் ஜெகனின் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
யங் லீடர்ஸ் ஃபார் நவ்யா ஆந்திரா என்பதில் 70000 இளைஞர்கள் இணைந்தனர். இதனை ஜெகனும் பிரசாந்தும் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ’ராவளி ஜெகன் காவளி ஜெகன்’ எனும் பிரச்சாரப்பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனை 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கண்டு ரசித்தனர்.
‘நின்னு நம்மம் பாபு’ (நாங்கள் உங்களை நம்பவில்லை சந்திரபாபு) என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றினர்.