Electoral bonds scheme | Supreme Court | Advocate Prashant Bhushan | 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்.31) விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் இந்தத் திட்டம் அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் ஊழலை ஊக்குவிக்கும் என்று கூறினார்கள். மேலும், இது மக்களின் உரிமையை தோற்கடிக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி ஆர் கவாய், ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான என்ஜிஓ சங்கம் (ADR) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான உரிமையை இது தோற்கடிக்கிறது. ஒரு கட்சியை பற்றி அறிந்துக்கொள்வது, 19(1)(a) பிரிவின் கீழ் அடிப்படை உரிமையாகும்” என்றார்.
தொடர்ந்து, “பெயர் தெரியாதவர்கள் ஊழலை ஊக்குவிக்கிறார்கள். பத்திரங்கள் மூலம் பணம் கிக்பேக்காக கொடுக்கப்படுகிறது என்று நம்புவதற்கு அடிப்படைகள் உள்ளன” என்றார்.
இதற்கிடையில், “மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, ஆளும் கட்சிகள்தான் நிதியில் பெரும் பங்கைப் பெறுகின்றன” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : ‘Anonymity promotes corruption’: Petitioners in electoral bonds scheme case to Supreme Court
மேலும், “இது ஜனநாயகத்தை சீர்குலைத்து அழிக்கிறது” எனவும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கிய நியாயங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவற்றால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளையும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இது குறித்து பூஷண், “தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 5 ஆண்டுகளில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கான பங்களிப்பு வேறு எந்த முறையையும் விட அதிகமாக உள்ளது.
இந்தத் தொகைகள் மிகப் பெரியவை. ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மத்திய ஆளும் கட்சி ரூ. 5,000 கோடிக்கு மேல் பெற்றுள்ளது.
இதை வெளிப்படைத்தன்மையற்றதாக ஆக்குவதன் மூலம், இந்தப் பணத்தின் ஆதாரம் என்ன, அது கறைபடிந்ததா என்பது போன்றவற்றை அறியும் குடிமகனின் மிக முக்கியமான உரிமை தோற்கடிக்கப்படுகிறது” என்றார்.
ஜனவரி 2, 2018 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் உள்ள எவரும் பெயர் குறிப்பிடாமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கக்கூடிய வசதியை ஏற்படுத்தி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“