மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெட்ச்சர் இல்லாமல், மருத்துவமனை நிர்வாகம் கர்ப்பிணி பெண்ணை நடந்து செல்ல கட்டாயப்படுத்தியதால், தரையிலேயே குழந்தை பிறந்ததால் அக்குழந்தை இறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் கோடாடோங்கிரி கிராமத்தை சேர்ந்த நீலு வர்மா (25) என்ற கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக, பெடுல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்ட்ரெட்ச்சர் இல்லாமல் அவரை நடந்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. தன்னால் நடந்து செல்ல முடியாது என அப்பெண் கூறியும் அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், அவர் நடந்து செல்லும்போதே குழந்தை பிறந்து, தரையில் விழுந்ததாகவும், அதனால் அக்குழந்தை இறந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அப்பெண்ணுக்கு ஸ்ட்ரெட்ச்சர் தராமல் நடக்க கட்டாயப்படுத்தியது மருத்துவமனையின் அலட்சியம் என, அம்மருத்துவமனை மருத்துவர் பாரங்கா ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும், குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.