இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை பிரதமர் நரேந்திர மோடி இன்று ராணுவத்துக்கு அர்ப்பணிக்கிறார்.
மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை வலியுறுத்திவரும் நிலையில், தற்போது உள்நாட்டிலேயே அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கியை தயாரித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியின் சிறப்புகள்:
இந்த அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கி சென்னை ஆவடியில் உள்ள கன ஊர்தி தொழிற்சாலையில், ரூ.8,400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்துடன் டி.ஆர்.டி.ஓ இணைந்து அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை உருவாக்கியுள்ளது. இந்த அதிநவீன பீரங்கியைப் பயன்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கி வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆவடி கன ஊர்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கி வாகனங்களை இன்று சென்னை வரும் பிரதமர் நரேதிர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்திய ராணுவம் எல்லையில் ஏற்கெனவே 124 அர்ஜுன் பீரங்கிகளை பயன்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, கூடுதலாக இந்த 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்களும் சேர்கின்றன.
ஒவ்வொரு அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனமும் 58.5 டன் எடை கொண்டது. 10.638 மீட்டர் நீளமும் 9.456 மீட்டர் உயரமும் கொண்டது.
அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனம் 1,400 குதிரை சக்தி திறனுடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பீரங்கி வாகனம் நவீன 120 மி.மீ துப்பாக்கியுடன் இயங்குவதோடு எந்த நேரத்திலும் எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அர்ஜூன் மார்க் 1 ஏ பீரங்கி இரவு நேரத்திலும் இலங்குகளை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்தும் வகையில், தெர்மல் இமேஜிங் என்கிற பிரத்யேக வசதிகொண்ட அதி நவீன கேமரா உள்ளது.
அர்ஜூன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்கள் சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும் மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் மற்றும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் இயங்கும் திறன் கொண்டவை.
தரைவழி மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க இரண்டாம் நிலை ஆயுதங்களாக 7.6 மி.மீ மற்றும் 12.7 மி.மீ 2 உயர் ரக துப்பாகிகளும் இந்த அதிநவீன அர்ஜூன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.
ஒரு அர்ஜூன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனத்தை காமண்டர், பீரங்கியை சுடுபவர் உள்பட 4 பேர் இயக்கலாம்.
1970களில் அர்ஜுன் ரக பீரங்கிகள் உருவாக்கப்பட்டபோது, டி.ஆர்.டி.ஓ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால், அது பல கட்ட ஆய்வுகளைக் கடந்து பல தரப்பினரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, தயாரிக்கப்பட்டுள்ள இந்த அர்ஜூன் மார்க் 1 ஏ பீரங்கிகள் தற்போது இருக்கும் பீரங்கிகளைவிட அதிக சக்தி வாய்ந்த அதி நவீன பீரங்கிகளாக உள்ளன.
அர்ஜூன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்களை இன்று சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த பீரங்கிகள் இந்திய ராணுவத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்க உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"