ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த பிறகு துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம், ட்விட்டர் பக்கத்தில் மலையாளத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.
அந்தப் பதிவுடன் 2020 துபாய் கண்காட்சியில் முதல்வர் விஜயனுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ஷேக் முகமது பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவில், ‘’ஐக்கிய அரபு அமீரகம் கேரளத்துடன் சிறப்பான நட்புறவை கொண்டிருக்கிறது. துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சியில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்’’ என்று ஷேக் முகமது பதிவிட்டிருந்தார்.
இதை அவர் மலையாளத்தில் எழுதி ட்வீட் செய்திருந்தார்.
இதையடுத்து அவரது ட்வீட்டை ஷேர் செய்து முதல்வர் விஜயன் அரபு மொழியில் அவருக்கு பதிலளித்தார்.
அதில், ’ ..உங்கள் விருந்தோம்பல் மற்றும் அன்புடன் நீங்கள் அளித்த வரவேற்பால் நெகிழ்ந்து போனேன்.. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாயுடன் கேரளாவின் நல்லுறவு மேலும் வலிமை அடையும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இரு தலைவர்களும் பதிவு செய்திருந்த ட்வீட்களை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இருவரின் சந்திப்பின்போது, கேரளாவுக்கு அளித்துவரும் ஆதரவுக்காக ஷேக் முகமது பின்னுக்கு முதல்வர் விஜயன் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், தொழில் செய்ய ஏற்ற மாநிலமான கேரளாவில் அதிக அளவு முதலீடு செய்ய முன்வருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “