ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனான சந்திப்புக்குப் பிறகு, தேசிய தலைநகரில் சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடுமாறு பீகார் முதல்வர் வலியுறுத்துவார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
எதிர்க்கட்சி தலைமையிலான அரசாங்கங்களின் ஆதரவுடன், மத்திய அரசின் முடிவைத் தடுக்க ராஜ்யசபாவில் ஒரு மசோதாவைக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவால், "இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 2024 இல் பா.ஜ.க இருக்காது" என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: டெல்லி அரசுக்கு நிர்வாக அதிகாரங்கள்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு மனு
“நிதீஷ் ஜி இன்று எனக்கு ஆதரவளிக்க வந்தார். அவர் எங்களுடனும் டெல்லி மக்களுடனும் இருக்கிறார். பா.ஜ.க.,வின் அவசரச் சட்டம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அது இழைத்துள்ள அநீதியையும் அவர் ஏற்கவில்லை. இதற்கு எதிராக நிதிஷ் ஜி எங்களுடன் இணைந்து போராடுவார். மத்திய அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் போராட வைக்கிறார்,” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
“பா.ஜ.க அல்லாத அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்தால், இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் மசோதா மூலம் கொண்டு வர முடியும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 2024-ல் பா.ஜ.க இருக்காது... மத்திய அரசின் முடிவு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால், அது 2024 தேர்தலில் பா.ஜ.க.,வின் அரையிறுதிப் போட்டியாக இருக்கும்,” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
சனிக்கிழமையன்று, புதிய அவசரச் சட்டத்தை எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தார். “ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு வரும்போது எதிர்க்கட்சிகள் அதை தோற்கடிக்குமாறு நான் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களிடமும் நானே பேசி, மசோதாவை எதிர்க்கச் சொல்வேன். இது ஜனநாயக விரோதமானது, நிறைவேற்றக் கூடாது,'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்த அவசரச் சட்டத்தை "ஜனநாயக விரோதம்", "அரசியலமைப்புக்கு விரோதமானது", "கூட்டாட்சி அமைப்பு மீதான தாக்குதல்" மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட "நேரடி சவால்" என்றும் அவர் கூறினார். கோடை விடுமுறைக்குப் பிறகு (மே 22 முதல் ஜூலை 2 வரை) மீண்டும் திறக்கப்பட்டவுடன், ஆம் ஆத்மி அவசரச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என்றும் அவர் கூறினார்.
டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) ஆணை, 2023, வெள்ளிக்கிழமையன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது, இது தலைநகரில் உள்ள அனைத்து குரூப் A மற்றும் DANICS அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவிகள் குறித்து முடிவு செய்ய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைக்கும். அவசரச் சட்டத்தின்படி, அதிகாரம் டெல்லி முதல்வரின் தலைமையில் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவிடம் இருக்கும், மேலும் "அனைத்து விஷயங்களும்... இருக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் முடிவு செய்யப்படும்." இதன்மூலம், திறம்பட, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு அதிகாரத்துவத்தினர், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் முடிவுகளை நிராகரிக்க முடியும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், "லெப்டினன்ட் கவர்னரின் முடிவே இறுதியானது" என்றும் சட்டதிருத்தம் கூறுகிறது.
ஜனநாயகத்தில் மக்களின் ஆணையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், டெல்லி அரசிடம் அரசியல் சாசன பெஞ்ச் ஒப்படைத்த உச்ச நீதிமன்றத்தின் மே 11 தீர்ப்பை ரத்து செய்யும் முயற்சியாக இந்த அவசரச் சட்டம் பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.