New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/06/Ds6bGfsdwBKIgJhNMP48.jpg)
பஹல்காம் தாக்குதல் குறித்து உளவுத்துறை ரிப்போர்ட்: காங்.; 'நாட்டை பலவீனப்படுத்த முயற்சி': பா.ஜ.க. பதிலடி
பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து முன்கூட்டியே பிரதமர் மோடிக்கு தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பற்ற கருத்தைத் தெரிவித்துள்ளதாக பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து உளவுத்துறை ரிப்போர்ட்: காங்.; 'நாட்டை பலவீனப்படுத்த முயற்சி': பா.ஜ.க. பதிலடி
பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து முன்கூட்டியே பிரதமர் மோடிக்கு தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பற்ற கருத்தைத் தெரிவித்துள்ளதாக பா.ஜ.க. விமர்சித்து உள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், சர்ச்சையான கருத்துகளைக் கூறும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பட்டியலில் கார்கேவும் இணைந்துள்ளதாக பா.ஜ.க. குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலாத் தலமான பஹல்காமின் பைசாரான் பள்ளத்தாக்கில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தானே காரணம் எனத் தொடர்ந்து கூறிவரும் இந்தியா, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் படைகளைத் தயார்ப்படுத்தி வருகிறது.
சமீபத்தில், பாகிஸ்தனுக்கு பதிலடி கொடுக்கும் விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். மேலும், உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் நாளை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: As Kharge speaks of ‘intel report’ before Pahalgam attack,
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து 3 நாள்களுக்கு முன்பே “உளவுத்துறை அறிக்கை” கொடுத்தது என்பதால்தான் காஷ்மீர் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற காங்கிரசின் அரசியல் அமைப்பை காக்கும் பேரணியில் உரையாற்றிய கார்கே, “நீங்கள் அந்த தகவல் பெற்றிருந்தால், ஏன் அதை உளவுத்துறை, பாதுகாப்புப் பிரிவுகள், காஷ்மீர் காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF) ஆகியோருடன் பகிரவில்லை? எதற்காக பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கார்கே கேட்டார். இதனை கூறினார். அவரது கருத்துகள், பா.ஜ.க.வின் கடுமையான எதிர்ப்பை உருவாக்கின. மேலும் அவர் மற்றும் காங்கிரஸ் கட்சி நாட்டை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த கருத்து குறித்து பதிலளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் பதிலளித்த பாஜக தேசிய செய்தித்தொடர்பாளருமான ரவிசங்கர் பிரசாத், கார்கே என்ன மாதிரியான கருத்தைக் கூறுகிறார். ஒருபுறம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறுகிறார். மறுபுறம் நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஒரு பெரிய கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியில் மூத்த தலைவரிடமிருந்து இதைவிட பொறுப்பற்ற கருத்து வராது. பாதுகாப்பு ஒத்திகையில் மக்கள் அனைவரும் நாட்டுடனும் அரசுடனும் உறுதுணையாக இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது மிகுந்த மனவேதனையை உண்டாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இன்று நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. கார்கே சார் உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? தயவுசெய்து புரிந்துகொள்ள முயலுங்கள். இந்நாளில், நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர், அரசு மற்றும் நாட்டுடன் நிற்கிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் ‘பிரதமர் தெரியாமலே காஷ்மீருக்கு செல்லவில்லை’ என்கிறீர்கள்? இது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகும். இன்று நானும் உங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்பலாம், கார்கே சார், ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. நீங்கள் கொஞ்சம் பொறுப்பு உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என நம்புகிறேன். உங்கள் மற்ற தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒருவர் ரஃபேல் குறித்து கார்டூன் வரைக்கிறார். இன்னொருவர் வேறு செய்கிறார். நீங்கள் அவர்களை கட்டுப்படுத்த வேண்டியவர், ஆனால் நீங்கள் அவர்களோடு சேர்ந்து நடக்கிறீர்கள்? இது சரியல்ல, இது மிகவும் வருந்தத்தக்கது, தயவுசெய்து கட்டுப்படுத்துங்கள் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ஜார்க்கண்ட் கூட்டத்தில் பேசிய கார்கே, சாதிவாரி கணக்கெடுப்பை நோக்கி பாஜக எடுத்துள்ள நிலைப்பாட்டை குறித்து பேசினார். ஜார்கண்டில் உள்ள ஆதிவாசிகளுக்காக, சர்னா (Sarna) கணக்கெடுப்பில் தனி மதமாக சேர்க்குமாறு அரசு மீது காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும் என கூறினார். இது காந்தி, அம்பேத்கர் மற்றும் புத்தர் ஆகியோரால் மதிக்கப்பட்ட ஒரு மரபு மதமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நான் நேற்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் 3 பரிந்துரைகளை முன்வைத்துள்ளேன். முதலாவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முன் அனைத்து கட்சிகளுடனும் அரசு ஆலோசனை நடத்த வேண்டும். 2-வது, ஆதிவாசிகள், தலித் மற்றும் பிற வகுப்பினருக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 3-வது, இடஒதுக்கீடுகளுக்கான 50% வரம்பை உயர்த்த வேண்டும்” என கார்கே கூறினார்.
இந்த பேரணி ராஞ்சியின் பழைய விதான சபா மைதானத்தில் நடைபெறத் தொடங்கியது மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் புபேஷ் பகேல் மற்றும் பலர் உட்பட காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.