உ.பி.யைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, தனது ஜோத்பூர் ஆசிரமத்தில் பலாத்காரம் செய்ததாகப் பிரபல சாமியார் அசராம் பாபு மீதான வழக்கில் இன்று ஜோத்பூர் எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. எனவே பதட்டமான சூழலைத் தவிர்க்க ராஜஸ்தான் முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசராமிற்கு அதிகமான பக்தர்கள் உள்ள ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீதிமன்ற வளாகத்தை சுற்றியும் காவல்துறையினர் சூழ்ந்துள்ளனர். இந்த வழக்கில் அரசாம் பாபு உட்பட, அவரின் சீடர்கள், ஷில்பி, ஷரத் சந்திரா, சவராம் ஹெத்வேத்யா ஆகியோர் மீதும் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு(75). மத்தியப் பிரதேச மாநிலம், சிந்திவாரா பகுதியில் உள்ள ஆஸ்ராம் பாபுவின் மற்றொரு ஆசிரமத்தில் இளம்பெண் ஒருவர் தங்கிப் படித்து வந்தார். இந்தப் பெண் தன்னைச் சாமியார் ஆஸ்ராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி ஜோத்பூர் ஆசிரமத்துக்கு வரக்கூறிய ஆஸ்ராம் பாபு தன்னை பலாத்காரம் செய்தார் என்று அந்த இளம்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆஸ்ராம் பாவுவை கைது செய்தனர். இவர் மீது போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து ஆஸ்ராம் பாபு சிறையில் இருந்து வருகிறார்.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, 2017, மே 19-ம்தேதி முதல் இந்த வழக்கில் வாதம் தொடங்கியது. இதுவரை ஆஸ்ராம் பாபு 12 முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பம் செய்து அத்தனை முறையும் நிராகரிக்கப்பட்டது.
இறுதிக்கட்ட விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகிறது. நீதிபதி மதுசூதன் சர்மா ஜோத்பூர் சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரவும் பகலுமாக வீட்டைச் சுற்றி பாதுகாப்பு அளித்து வருகின்றனர் ராஜஸ்தான் காவல்துறையினர்.
அசராம் பாபு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று காலை 10 மணிக்குள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்குக் காலை 9.40 மணி அளவில் நீதிபதி வந்தடைந்தார்.