2013-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு கைது செய்து ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் இவரின் சீடர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை ஜோத்பூர் எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றம் விசாரித்து வந்தது.
விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று அறிவித்தது. இந்த வழக்கில் துணை குற்றவாளிகளாக அறியப்பட்ட சரத், ஷில்பி ஆகியோரையும் குற்றவாளிகள் என்று ஜோத்பூர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. மேலும் இந்தத் தீர்ப்பில், தண்டனைக் குறித்த விவரங்களை மதியம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு மற்றும் தண்டனையை அறிந்த அவரின் சீடர்கள் கதறி அழுதனர். இதன் விளைவாக எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க வட மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.