/indian-express-tamil/media/media_files/fPxwvmmUj6yZVYpk2iKI.jpg)
ஷிலாதித்ய சேத்தியா தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். (Express)
புற்றுநோயை எதிர்த்துப் போராடி வந்த அவரது மனைவி கவுகாத்தி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷிலாதித்ய சேத்தியா செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது பணி ஆயுதத்தால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: Assam Home Secretary shoots himself, minutes after wife’s death from cancer
ஷிலாதித்ய சேத்தியா 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரி. டி.ஐ.ஜி தரவரிசை ஐ.பி.எஸ் அதிகாரியான ஷிலாதித்யா சேத்தியா (44) அஸ்ஸாம் அரசாங்கத்தில் உள்துறை மற்றும் அரசியல் செயலாளராகப் பணியாற்றி வந்தார். அவர் கடந்த நான்கு மாதங்களாக தனது நோய்வாய்ப்பட்ட மனைவி அகமோனி பார்பருவாவைக் கவனிப்பதற்காக விடுப்பில் இருந்தார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கவுகாத்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையான நெம்கேர் மருத்துவமனையில் அவரது மனைவி சிகிச்சை பெற்று வந்தார்.
“இன்று மதியம், ஷிலாதித்ய சேத்தியாவின் மனைவி புற்றுநோயால் உயிரிழந்தார், அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக அறிவித்த உடனேயே, ஷிலாதித்ய சேத்தியா தீவிர சிகிச்சைப் பிரிவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
இந்த தம்பதியினர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கியிருந்தனர் என்று மருத்துவமனையின் எம்டி டாக்டர் ஹிதேஷ் பருவா கூறினார்.
“அவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக போராடி வந்தார், மேலும், வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். கடந்த இரண்டு மாதங்களாக, அவர் இங்கு சிகிச்சையைப் பெற்று வந்தார், மேலும், அவர் மருத்துவமனையில் ஒரு தனி அறையை எடுத்து இருந்தார்” என்று டாக்டர் ஹிதேஷ் பருவா கூறினார்.
“கடந்த மூன்று நாட்களில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம். இன்று மாலை 4.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவரிடம் தெரிவித்தார். டாக்டரும் ஒரு நர்ஸும் அவருடன் அறையில் இருந்தனர். மேலும், அவர் பிரார்த்தனை செய்ய விரும்புவதாகக் கூறி அவர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அறையில் இருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது” என்று அவர் கூறினார்.
இந்த துயர சம்பவம் குறித்து அசாம் டி.ஜி.பி ஜிபி சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஷிலாதித்ய சேத்தியா ஐ.பி.எஸ் 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரி, அசாமின் உள்துறை மற்றும் அரசியல் அரசாங்கத்தின் செயலாளர். நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடிய அவரது மனைவி இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்த சில நிமிடங்களில் இன்று மாலை தனது உயிரை மாய்த்துக்கொண்டார். ஒட்டுமொத்த அஸ்ஸாம் காவல்துறை குடும்பமும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
சேத்தியா அஸ்ஸாம் மாநில ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையில் ஒரு நிலையான உயர்வை அடைந்தார். அவர் முன்பு கோலாகாட், டின்சுகியா மற்றும் சோனிட்பூர் மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றினார். அவர் தற்போதைய பதவிக்கு முன்பு, 4 வது அஸ்ஸாம் போலீஸ் பட்டாலியனின் கமாண்டன்டாக பணியாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.