ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 26 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று பிற்பகல் 3.15 மணியளவில் ஸ்ரீநகர் - ஜம்முவின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லெத்போரா அவந்திபோரா பகுதியில் 54 பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 8 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின. வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றதால் உயிர்ப்பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில், தற்கொலைப் படையைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் அதி பயங்கர வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்து சிஆர்பிஎஃப் பேருந்தில் வந்து மோதியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் ராணுவ கான்வாயில் இந்த சிஆர்பிஎஃப் பேருந்தும் இடம்பெறும்.
இந்த நிலையில், சமீபத்திய தகவலின் படி, 26 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகி இருப்பதாகவும், 15 வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிகிறது.
பிரதமர் மோடி, 'இது ஒரு வெறுக்கத்தக்க மோசமான தாக்குதல். வீரர்களின் தியாகம் வீண் போகாது. வீர மரணம் அடைந்த ஒவ்வொரு வீரர்களின் குடும்பத்துடனும் இந்த தேசம் துணை நிற்கும்' என்று ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்திய மோடி, நாளை ஸ்ரீநகர் விரைகிறார்.