/tamil-ie/media/media_files/uploads/2017/09/Supreme-court.jpg)
Tamil Nadu News Today
Ayodhya Verdict: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கு குறித்த தகவல்கள், வழக்கு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
1528: முகலாய மன்னர் பாபர் அயோத்தியில் மசூதி கட்டினார். இது ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
1853: அயோத்தியில் முதன்முதலில் பெரும் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 75 பேர் பலியாகினர்.
1859: ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, உள்ளே முஸ்லிம்கள், வெளியே ஹிந்துக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. இருபுறம் சுவர் எழுப்பி, மோதல் அப்போதைக்கு தவிர்க்கப்பட்டது.
1949: மசூதியில் ராமர் விக்ரகம் தென்பட்டதால், முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு, அரசு பூட்டுப் போட்டது. மேலும், 'அயோத்தி சர்ச்சைக்குரிய இடம்' என அறிவிக்கப்பட்டது.
1950: 'அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது' என, பைசாபாத் நீதிமன்றத்தில், கோபால் சிங் விஷாரத், வழக்கு தொடர்ந்தார். இது சுதந்திரத்துக்குப் பின், அயோத்தி தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்ற முதல் வழக்கு.
1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் நீதிமன்றத்தில் நிர்மோகி அகாரா வழக்கு தொடுத்தார்.
1961: உ.பி.,யில் வக்பு சன்னி மத்திய வாரியம், பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
1986: பூட்டப்பட்ட மசூதியின் உள்ளே சென்று, ஹிந்துக்கள் வழிபடலாம் என, மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதால், முஸ்லிம்கள் போராட்டம் வெடித்தது.
1989: 'சர்ச்சைக்குரிய இடம் முழுமையாக, கோவில் என அறிவிக்க வேண்டும்' என்று, பக்தர்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும், மூன்று நீதிபதிகள் உடைய அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்சுக்கு மாற்றப்பட்டன.
1991: சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம்; எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிசம்பர் 6, 1992: மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில், 2,000 பேர் பலியாகினர்.
மார்ச், 2002: குஜராத்தின் கோத்ராவில், அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணம் செய்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 58 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 2002: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணையை துவக்கியது.
ஆகஸ்ட் 2003: மசூதி இருந்த இடத்தில், கோவில் இருந்ததற்கான சான்று இருப்பதாக, தொல்லியல் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்தது.
செப்டம்பர் 2003: பாபர் மசூதி இடிப்பில், ஏழு ஹிந்து தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால், அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்தது.
ஜூலை, 2005: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில், வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில், ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
ஜூலை, 2009: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன், தன் அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பின் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை, இன்னும் வெளியிடப்படவில்லை.
செப்டம்பர் 2010: 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், மூன்றில் ஒரு பகுதி, ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி, நிர்மோனி அகாரா அமைப்புக்கும், மூன்றாவது பகுதி, சன்னி வக்பு வாரியத்துக்கும் பிரிக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு பின் பணி தொடங்க வேண்டும்' என, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மே 2011: அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மூன்று தரப்பினர் உள்ளிட்ட, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
பிப்ரவரி 2016: வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மார்ச் 21, 2017: 'இப்பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஏற்படுத்தலாமா' என உச்ச நீதிமன்றத்தின், அப்போதைய தலைமை நீதிபதி, கெஹர் யோசனை தெரிவித்தார்.
பிப்ரவரி 8, 2018: வழக்கு தொடர்பான தனிநபர் மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
மார்ச் 14 2018: சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செப்டம்பர் 27 2018: 'மசூதிகள் என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்ததில்லை' என, 1994ல் அளித்த தீர்ப்பை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜனவரி 8, 2019: வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையில், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், என்.வி.ரமணா மற்றும் யு.யு.லலித் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
ஜனவரி 10: அமர்வில் இருந்து விலகுவதாக, நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்.
ஜனவரி 25: ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ.நஜீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமிக்கப்பட்டது.
மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு தலைமையில், மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
ஆகஸ்ட் 1: சமரச பேச்சுவார்த்தை நடத்திய, மத்தியஸ்தர் குழு, இறுதி அறிக்கையை, 'சீல்' வைக்கப்பட்ட கவரில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஆகஸ்ட் 2: 'மத்தியஸ்தர் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது' என, உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஆகஸ்ட் 6: உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கை தினந்தோறும் விசாரிக்க துவங்கியது.
ஆகஸ்ட் 16: விசாரணை நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நவம்பர் 8: அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு, நவம்பர் 9ம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.