பாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board (AIMPLB) ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், தங்களது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பாபர் பாபர் மசூதி இருந்த இடம், இப்போது மட்டுமல்ல எங்களுக்கு எப்போதுமே அது மசூதி தான். ஹாஜியா சோபியா இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். பெரும்பான்மையினராக இருப்பதால், தங்களுக்கு சாதகமாக நீதியை அவர்கள் மாற்றி எங்களிடமிருந்து அவர்கள் நிலத்தை அபகரித்துள்ளனர். இதனால் நாங்கள் ஒண்ணும் மனம் தளர்ந்துவிடவில்லை. இந்த நிலை விரைவில் மாறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மசூதி இருந்த இடத்தில் இந்து கடவுள் சிலைகளை கொண்டு வைப்பதனால் மட்டும் அது மசூதி இல்லை என்று ஆகிவிடாது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் தற்போது ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது. இந்த இடத்தை திரும்பப்பெற இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தொடர்ந்து வலியுறுத்தும். இஸ்லாமிக் ஷரியாவின்படி மசூதி இருந்த இடத்தில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது இறுதிவரை மசூதியாகவே கருதப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி, எந்தெவாரு கோயிலையோ அல்லது இந்து வழிபாட்டு தலங்களையோ இடித்துக்கட்டப்படவில்லை. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிலும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய பொதுச்செயலாளர் மவுலானா முகம்மது வாலி ரஹ்மானி குறிப்பிட்டுள்ளார்.
1949 டிசம்பர் 22 இரவு ( அன்று தான் அந்த இடத்தின் மையப்பகுதியில் இந்து கடவுள் சிலைகள் நிறுவப்பட்டது) வரை, நாங்கள் அங்கே தொழுகை நடத்தியுள்ளதை, உச்சநீதிமன்றம் கூட உறுதி செய்துள்ளது. மசூதி இருந்த இடத்தில் இந்து கடவுள் சிலைகளை வைத்தது சட்டவிரோத செயல் என்ற எங்களது வாதத்தை, உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி,பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வையும் சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்ற நடவடிக்கை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வளவு கருத்துகளை தெரிவித்த உச்சநீதிமன்றம், தங்களது மசூதி இருந்த இடத்தை, அவர்களிடம் வழங்க உத்தரவிட்டிருந்தது கடும் அதிர்ச்சியளித்தது. உச்சநீதிமன்றம், நாட்டின் தலைமை அதிகாரம் ஆகும். எங்களுக்கு அந்த தீர்பபை ஏற்றுக்கொள்வதை தவிர வேறுவழியில்லை. இருந்தபோதிலும், இந்த தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுள்ள நிகழ்வு, நீதியை குழிதோண்டி புதைக்கும் செயலாகும். மசூதி இருந்த இடம் எப்போதுமே தங்களுடையது தான் ஆகும். அந்த இடம் எங்களது மனதில் இடம்பெற்றுவிட்டது. நாங்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த இடத்தில் தொழுகை செய்துவந்துள்ளோம். திடீரென்று, அந்த இடத்தில் தொழுகை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டது. இஸ்தான்புல்லில் நிகழ்ந்த ஹாஜியா சோபியாவில் உள்ளபடி, எங்களது நம்பிக்கைகள் நிச்சயம் நிறைவேறும், அதற்காக நாங்கள் காத்திருக்க தயாராக உள்ளதாக, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் முப்தி இஜாஜ் அர்ஷத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil