மறுசீராய்வு குறித்து யோசிக்கப்படும் - இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம்
Ayodhya verdict muslim body will consider review plea : சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பினை இன்று அறிவித்தது ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு. இந்த தீர்ப்பினை தொடர்ந்து அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ”இந்த தீர்ப்பு நீதியையோ, சரிசமமான தீர்வுகளையோ வழங்கவில்லை” என்று கூறியுள்ளது. மேலும் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பின் அனைத்து கூறுகளையும் படித்து முடித்த பின்பு மேல் முறையீட்டு மனு குறித்து யோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய செயலாளர் ஸஃபர்யாப் ஜிலானி “தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அரசியல் அமைப்பு மற்றும் மதசார்பற்ற தன்மை குறித்து நிறைய பேசியுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை. சட்டப்பிரிவு 142-ன் கீழ் இப்படி ஒரு முடிவினை எடுக்க இயலாது” என்று கூறினார்.
ஷரியத் படி ஒரு மசூதியை எங்களால் எப்போதும் விட்டுத்தர இயலாது. ஆனாலும் நாங்கள் இந்த தீர்ப்பினை ஏற்றுக் கொள்கிறோம். 12ம் நூற்றாண்டுக்கும் 1528க்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. அதே போன்று இங்கு விக்ரமாதித்யன் காலம் முதலே கோவில் இருந்ததாக பலரும் கூறுகின்றனர். ஆனால் அதற்கும் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.
மசூதிக்காக வழங்கப்பட்டிருக்கும் மாற்று நிலம் குறித்து அவர் பேசிய போது “இது நிலம் குறித்த பிரச்சனை இல்லை. இது மசூதி குறித்தது. அவர்களே 1949ம் ஆண்டு ராமர் சிலைகளை மசூதிக்கள் வைக்க முற்பட்டனர் என்று ஒப்புக் கொண்டனர். இருப்பினும் மற்ற கட்சியினருக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு வருங்காலத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் காரணியாக அமையும் என்றும் ஜிலானி அறிவித்தார்.
வழக்கறிஞர் ஷாம்செத் கூறுகையில் “இந்த தீர்ப்புக்கு எதிராக நாங்கள் நிச்சயம் போராடுவோம். இந்த மசூதி பிரச்சனையை இவர்கள் நடத்திய விதம் எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை நிச்சயம் நாங்கள் உலகிற்கு சொல்வோம். வருங்காலத்தில் இது போன்று ஒரு மசூதி அழிக்கப்படாது என்று நாங்கள் நம்புகின்றோம். ஜனநாயக நாட்டில் எங்களின் எதிர்பார்ப்பு எல்லாம் அரசியல் சாசன முன்னெடுப்பு தான் என்று அவர் கூறினார்.
இது யாரோ ஒருவருக்கு வெற்றி அல்லது தோல்வி அல்ல. இந்த வழக்கு விவகாரத்தில் அனைவரும் அமைதியாக இருக்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் இந்த தீர்ப்பினை எதிர்த்து மறுசீராய்வு மனுவை நிச்சயம் தாக்கல் செய்வோம். ஆனால் அதை உறுதியாக கூற இயலாது என்றும் பதில் கூறினார்கள்.