அயோத்தி வழக்கில் முக்கிய தரப்புகளில் ஒன்றான சன்னி மத்திய வக்ஃப் வாரியம் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அயோத்தியில் ஒரு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்குவதை ஏற்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சன்னி வாரியத் தலைவர் ஜூஃபர் ஃபரூக்கி தெரிவித்தார்.
“பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வாரியம் பரிசீலித்துள்ளது. எந்தவொரு மறுஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மாட்டோம் என்று வாரியம் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது” என்று ஃபரூக்கி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மறுஆய்வு மனு தாக்கல் செய்யாதது தொடர்பான தீர்மானத்தை கூட்டத்தில் கலந்து கொண்ட 7 உறுப்பினர்களில் 6 பேர் நிறைவேற்றினர். இருப்பினும், வழக்கறிஞர் அப்துர் ரசாக் கான் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு ஆதரவாக இருந்தார் என்று ஃபரூக்கி கூறியதை பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
“அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்குவது உட்பட உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அனைத்து நடவடிக்கைகளும் இன்னும் வாரியத்தின் பரிசீலனையில் உள்ளன. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வாரிய உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முறைப்படுத்த மேலும் அதிக நேரம் கேட்டுள்ளனர். எந்தவொரு முடிவும் எடுக்கப்படும்போதும் அது தனியாக தெரிவிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் வாரிய உறுப்பினருமான இம்ரான் மபூத்கான், ஃபரூக்கி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக அழுத்தத்திற்கு ஆளானதாக குற்றம் சாட்டினார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டு ஃபரூக்கியால் நிராகரிக்கப்பட்டது.
சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தைத் தவிர, மௌலானா மஹ்மூத் மதானி தலைமையிலான ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (ஜே.யு.எச்) பிரிவும் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.
மறுபுறம், மூத்த தியோபந்த் ஆசிரியர் மௌலானா அர்ஷத் மதானி தலைமையிலான ஜாமியத் பிரிவும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஆதரவாக உள்ளன.
பல தசாப்தங்களாக நீடித்த சர்ச்சையில், உச்ச நீதிமன்றம் நவம்பர் 9 ம் தேதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை கோயில் பக்கத்திடம் ஒப்படைத்து தனது தீர்ப்பை வழங்கியது. மேலும், 1949 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் சிலைகளை வைக்கும் செயல் அவமதிப்பு என்று கூறினாலும், பாபர் மசூதி கட்டுவதற்காக அங்கே ஒரு கோயில் இடிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. மேலும், 1992 ஆம் ஆண்டில் மசூதி இடித்ததை சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது என்றும் தீர்ப்பளித்தது.