உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
Advertisment
இதுதொடர்பாக முதலில் நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது.
ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
இதற்கிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, 'வாழும் கலை' அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.
அயோத்தி பிரச்சனை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெறவுள்ள நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், நாளை (நவ.9) தீர்ப்பு வெளியாகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
இதையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மட்டுமின்றி பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்ட மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கோவா மாநிலத்திலும் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் மட்டும் சுமார் 12ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தியின் அருகே உள்ள 8 கல்லூரிகள் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், காவல்துறையினருக்கு நவம்பர் 30ஆம் தேதி வரை விடுமுறை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 78 ரயில் நிலையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடவும் பைசாபாத் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.