Advertisment

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா; அடுத்த முதல்வரை பாஜக தலைமை முடிவு செய்யும் என தகவல்

B S Yediyurappa resigns, says BJP leaders will decide on his replacement: ராஜினாமா தனது சொந்த முடிவு, யாரும் வெளியேற கட்டாயப்படுத்தவில்லை; ராஜினாமா செய்த பின் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்

author-image
WebDesk
New Update
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா; அடுத்த முதல்வரை பாஜக தலைமை முடிவு செய்யும் என தகவல்

கடந்த சில நாட்களாக வெளிவந்த ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தவார் சந்த் கெஹ்லாட்டிடம் திங்கள்கிழமை பிற்பகலில் அளித்துள்ளார். ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலகிய எடியூரப்பா, அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

Advertisment

தனக்கு பிறகு முதல்வராக யார் பொறுப்பேற்றாலும், அவருக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அமைச்சர்களைக் கேட்டுக் கொண்ட எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்து அமைச்சர்களாக இருப்பவர்கள், இந்த முதல்வர் மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார். ராஜினாமா தனது சொந்த முடிவு என்றும் அவரை யாரும் வெளியேற கட்டாயப்படுத்தவில்லை என்றும் எடியூரப்பா தெளிவுபடுத்தினார். மேலும் "தேசிய தலைமையில் இருந்து யாரும் என்னை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தவில்லை," என்றும் எடியூரப்பா கூறினார்.

எதேனும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பணியாற்ற அவர் தயாராக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, ​​“நான் மாநிலத்தை விட்டு வெளியேறுவது குறித்து எந்த கேள்வியும் இல்லை. கர்நாடகாவில் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். அடுத்த தேர்தல்களில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நான் பணியாற்றுவேன்.” என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடகாவில் பாஜக அரசின் இரண்டு ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்ச்சியின் போது ராஜினாமா செய்வதற்கான முடிவை எடியூரப்பா அறிவித்திருந்தார். அரசியலில் தனது பயணத்தைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு, முதலமைச்சர் மேலும் கூறுகையில், “கார்கள் இல்லாத நேரத்தில், ஷிமோகாவின் ஷிகாரிபுராவில் கட்சி (பாஜக) பணியாற்ற சைக்கிள் ஓட்டியது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் ஒரு சில பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து கட்சியைக் கட்டியெழுப்பினோம், அதை இன்று இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றோம். ”

இருப்பினும், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லாததால், புதிய முதல்வரை பாஜக தேசிய தலைமை உறுதிப்படுத்தப்படும் வரை அவர் காபந்து முதல்வராக தொடரலாம்.

“அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ​​அவர் என்னை மத்திய அரசில் அமைச்சராக இருக்கச் சொன்னார். இருப்பினும், நான் கர்நாடகாவில் இருப்பேன், மாநில மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொன்னேன் ”என்று எடியூரப்பா உணர்ச்சிபூர்வமான உரையின் போது கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இந்த தொற்றுநோய் ஏற்பட்டதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இது எப்போதுமே எனக்கு ஒரு‘ அக்னிபரீட்சை’ தான்.” என்று கூறினார்.

திங்கள்கிழமை பிற்பகல் தொடர் ட்வீட்டுகளில், எடியூரப்பா தனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கையை தேசத்தைக் கட்டியெழுப்பவும், கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அர்ப்பணித்ததாகக் கூறினார்.

"ஜகஜ்யோதி பசவண்ணாவின் கயாகா, தசோஹா தத்வா மற்றும் சித்தகங்க மடத்தின் லிங்காய்க்யா ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் வாழ்க்கை ஆகியவற்றால், ஆழமாக ஊக்கம் பெற்ற எனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கையை தேசத்தைக் கட்டியெழுப்பவும், கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அர்ப்பணித்துள்ளேன்" என்று அவர் எழுதினார். .

"எங்களின் பெரிய தலைவர்களான, பண்டிட் தீன் தயாள் உபாத்யாஜி, சியாமா பிரசாத் முகர்ஜி, அடல்ஜி, அத்வானிஜி, முரளி மனோகர் ஜோஷிஜி ஆகியோர் தேசத்திற்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிக்க என்னை ஊக்கப்படுத்தியுள்ளனர். மோடிஜி, அமித் ஷாஜி மற்றும் நட்டாஜி ஆகியோரின் மகத்தான அன்பையும் ஆதரவையும் நான் பெற்றுள்ளேன், ”என்று எடியூரப்பா கூறினார்.

"அந்தோதயா மூலம் சர்வோதயா எங்கள் கட்சியின் வழிகாட்டும் தத்துவமாகும். கடந்த 50 ஆண்டுகளில், ஏழை, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகங்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாடு எனது முன்னுரிமையாக இருந்தது, மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவர நான் என்னை அர்ப்பணித்தேன், ”என்று எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பிற்கு முன் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.

லிங்காயத் சமூகத்தின் பலமான ஆளுமையான, 78 வயதான எடியூரப்பா, 2019 ஜூலை 26 அன்று பதவியேற்ற பின்னர் இரண்டு ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியுள்ளார்.

முன்னதாக 2007 நவம்பரில் ஒரு வாரம், பின்னர் 2008 முதல் 2011 வரை மூன்று ஆண்டுகள் எடியூரப்பா முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அவர் ஜூலை 2011 இல் ராஜினாமா செய்தார்.

2018 ஆம் ஆண்டில், மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணியால் தனது அரசாங்கம் கவிழ்க்கப்படுவதற்கு முன்பு அவர் இரண்டு நாட்கள் முதல்வராக பொறுப்பேற்றார்.

ஒரு வருடம் கழித்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த பதினேழு எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து எடியூரப்பாவுக்கு ஆதரவாக பாஜகவில் சேர்ந்த பிறகு அவரால் மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை அமைக்க முடிந்தது.

கடந்த ஒரு வாரமாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களுடனான சந்திப்புகளில் இருந்து, பலமான முதல்வருக்காக எடியூரப்பா பதவி விலகுவதான பேச்சுக்கு ஜூலை மாதம் 26 க்குப் பிறகு பதவி விலகுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Yeddyurappa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment