Patanjali Launches Cow Milk, Curd, Buttermilk & other Dairy Items Today : பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பசும் பால் மற்றும் பசும் பாலால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை இன்று முதல் அறிமுகம் செய்கிறது.
பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் 3 ஆண்டுகளுக்கு முன்பு “பதஞ்சலி” எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கையான பொருட்களை குறைந்த விலையில் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்யும் என்று ராம்தேவ் அறிவித்தார்.
ரசாயன கலப்பு இல்லாமல் பிஸ்கட், கிரீம்கள், பற்பசை, ஆயுர்வேத மருந்துகள், நெய், எண்ணெய், சோப் உள்பட அனைத்து வகை பொருட்களையும் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முதலில் ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே விற்ற இந்த நிறுவனத்தின் இயற்கை பொருட்களுக்கு மக்களிடம் மிகுந்த ஆதரவு கிடைத்தது.
தற்போது நாடெங்கும் சுமார் 6 ஆயிரம் இடங்களில் பதஞ்சலி நிறுவனம் இயற்கை தயாரிப்பு, உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. சுமார் 500 வகையான பொருட்கள் பதஞ்சலி நிறுவனம் மூலம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களை விற்று வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மல்டி நேஷனல் கம்பெனிகளை பதஞ்சலி விரட்டியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் அபரிதமான இந்த வளர்ச்சியில் பல புகழ்பெற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.
இந்நிலையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பசும் பால் மற்றும் பசும் பாலால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை இன்று முதல் அறிமுகம் செய்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்கே டிஜராவாலா கூறுகையில், "பசும் பால் மற்றும் பசும் பாலால் தயாரிக்கப்பட்ட தயிர், மோர், பன்னீர் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி-என்சிஆர், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பசும்பாலால் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமை அறிமுகம் செய்யவும் திட்டம் உள்ளது.
அதுமட்டுமின்றி பட்டாணி, காய்கறிகள் மற்றும் ஃபிரெஞ்ச் பிரைஸ் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.