புதுச்சேரியில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து 20-ம் தேதி பந்த் போராட்டம் நடைபெறும் என்று இந்தியா கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் புதுச்சேரி இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ராஜாங்கம், காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்தியலிங்கம், திமுக எம்.எல்.ஏ-க்கள் அனிபால் கென்ணடி, சம்பத், உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், 20-ம் தேதி நடைபெற உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்திய கூட்டணி கட்சியைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் ஏக மனதாக ஆதரவு தருவது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
20-ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் மாநில அளவிலான பந்த் போராட்டம் நடைபெறும் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.