வங்கதேசத்தில் இந்துத் தலைவர் ஒருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் "தன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்" என்று இந்தியா வலியுறுத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Pattern of systemic persecution’: India slams Bangladesh’s interim govt over killing of Hindu minority leader
இந்து சிறுபான்மை தலைவர் பாபேஷ் சந்திர ராய் கொல்லப்பட்டதை, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் "இந்து சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்புறுத்தும் செயல்" என வெளியுறவு அமைச்சகம் கூறியது.
இது தொடர்பான அறிக்கையை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ளார். அதில், "வங்கதேசத்தில் இந்து சிறுபான்மைத் தலைவர் ஸ்ரீ பாபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இடைக்கால அரசாங்கத்தின் கீழ் இந்து சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்புறுத்தும் முறையை நாங்கள் கண்டிக்கிறோம். முந்தைய இதுபோன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகள் தடையின்றி சுற்றித் திரிந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம், மேலும் இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் வேறுபாடுகளை உருவாக்காமல் பாதுகாக்கும் பொறுப்பை இடைக்கால அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் நினைவூட்டுகிறோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த பாபேஷ் சந்திர ராய்?
தினாஜ்பூரில் உள்ள பிரால் பகுதியில் வசித்த 58 வயதான இந்துத் தலைவர் பாபேஷ் சந்திர ராய், கடந்த வாரம் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த நாளிதழான தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் பூஜா உத்ஜபன் பரிஷத்தின் பிரால் பிரிவின் துணைத் தலைவராகவும், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தின் முக்கிய தலைவராகவும் ராய் திகழ்ந்தார்.
இது குறித்து தி டெய்லி ஸ்டாரிடம் ராயின் மனைவி சாந்தனா தெரிவித்துள்ளார். அதன்படி, அன்றைய தினம் மாலை சுமார் 4:30 மணியளவில் ராய்க்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னர் அவர் கடத்தப்பட்டதாகவும் சாந்தனா குறிப்பிட்டுள்ளார். 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் நர்பாரி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும், அங்கு அவர் கொடூரமாக தாக்கப்பட்டார் என்றும் சாட்சிகள் தெரிவித்தனர். பின்னர் அவரது மயக்கமடைந்த உடலை குற்றவாளிகள் அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, ராயை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், இந்தியா - வங்கதேச உறவில் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அந்த நாட்டில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து, உறவில் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.