சண்டிகர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெரும்பாலும் டெல்லி பயணத்திற்காக பணத்தை விரயம் செய்வதைப் பற்றி நமது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விமானப் பயணம், ஹோட்டலில் தங்குவதற்கு தடை விதித்த பஞ்சாப் மாநில ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான பன்வாரிலால் புரோஹித், அதிகாரிகள் ரயில்களில் பயணம் செய்து தலைநகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்க வேண்டும் என்று கடந்த செவ்வாய்கிழமை கூறினார்.
இந்த நிலையில், இன்று பஞ்சாப் ராஜ் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய பன்வாரிலால் புரோஹித், “வரி செலுத்துவோர் செலவில் விமானங்களில் பிசினஸ் கிளாசில் செல்வதற்குப் பதிலாக எளிமையான வாழ்க்கையை நடத்துங்கள்” என்று அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். அதே வேளையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளதாகவும், அப்போதுதான் 'தேசிய அளவில் வரி செலுத்துவோரின் பணம் வீணாகாது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பன்வாரிலால் புரோஹித் பேசியது பின்வருமாறு:-
“மக்களின் பணம் என்பது மக்களின் பணம் தான் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அது நமது பணம் அல்ல. நீங்கள் அரசாங்கத்தின் நிதியில் பயணம் செய்யும் போது, நீங்கள் பிசினஸ் கிளாஸை எடுத்துக்கொள்கிறீர்கள், உங்கள் சொந்த செலவில் செல்ல வேண்டியிருக்கும் போது, ரயில் மற்றும் எகானமி கிளாஸ் போன்ற விருப்பங்களைப் பார்க்கிறீர்கள். அப்படியானால், அதே கட்டுப்பாட்டை இங்கே ஏன் கடைப்பிடிக்கக்கூடாது? அதிகாரிகளாகிய நீங்கள் அறங்காவலர்களாக இருக்க வேண்டும். மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
பொதுமக்களின் பணத்தை சேமிப்பதும், நேர்மையாக இருப்பதும் தான் முன்னோக்கி செல்லும் வழி. வரி செலுத்துவோரின் நிதியில் இந்த பிசினஸ் கிளாஸ் பயணம் அனைவருக்கும் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் கூறுவேன். எனவே, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நான் சந்திக்கும் போது, முடிந்தால், தேசிய அளவில் மத்திய அரசால் இதை தடை செய்ய அலுவலக உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொருளாதார ரீதியில் செய்யக்கூடிய அதே பயணத்தில் ஏன் ஆயிரக்கணக்கானவர்களைத் தூண்டிவிட வேண்டும்? அவர்களின் ஈகோவை திருப்திப்படுத்துவது நல்லதல்ல. ஒருவர் பணிவாக இருக்க வேண்டும்.
2016-ல் நான் அசாம் ஆளுநராக இருந்தபோது, எப்போதும் எகானமி கிளாசில் பயணிப்பேன். ஒரு நாள் நான் கவுகாத்தியிலிருந்து டெல்லிக்கு பயணிக்க வேண்டியிருந்தபோது எகனாமி கிளாஸ் நிரம்பியதாகச் சொன்னார்கள். எகானமி கிளாஸ் கட்டணம் ரூ.5,000. பிசினஸ் கிளாஸ் மட்டும்தான் கிடைக்கும் என்றார்கள், வித்தியாசம் எவ்வளவு என்று கேட்டேன். 35,000 ரூபாய் என்றார்கள், நான் அதை மறந்து விடுங்கள். அடுத்த விமானத்தில் செல்வோம். அதனால் தான் வித்தியாசம். நான் அங்கு 7 ஆண்டுகளாக ஆளுநராக இருந்தேன், எனது முழு பதவிக் காலத்திலும் ஒருநாள் கூட பிசினஸ் கிளாசில் பயணம் செய்ததில்லை.
இப்போது, சண்டிகரில் இருந்து டெல்லி வரை எகானமி கிளாஸ் கட்டணம் 3,000 ரூபாய் என்றால், நீங்கள் ஏன் பொது நிதியைச் செலவிட வேண்டும்? அதுவும் பிசினஸ் கிளாஸ் பயணத்திற்கு 7 முறைக்கு மேல் செலவாகிறது. பிசினஸ் கிளாஸ் டிக்கெட் ரூ.25,000க்கு மேல் உள்ளது. இது ஒரு வரி செலுத்துவோர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம். எகானமி கிளாசில் ரூ.3,000 செலவாகும் வழித்தடத்திற்கு ரூ.35,000 விமான டிக்கெட்டை செலவழிப்பதில் எந்த அர்த்தமும் இல்ல. நகரை நடத்தும் அனைத்து அதிகாரிகளும் பொது பணத்தை சேமிக்க வேண்டும். எனவே அவர்கள் டெல்லிக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தால், தற்போது நீங்கள் ரயிலில் செல்லுங்கள் என்று நான் அவர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளேன். அத்தகைய நல்ல ரயில்கள் கிடைக்கின்றன, அதற்கு மூன்றரை மணி நேரம் மட்டுமே ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரிகளிடம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறும்போது, இதுபோன்ற செலவுகளைக் குறைப்பதே ஒரே வழி என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil