பொறியியல் மாணவர் முதல் ஆயுதமேந்திய கமாண்டோ வரை... பசவ ராஜுவின் மரணம் மாவோயிஸ்டுகளுக்கு பின்னடைவு ஏன்?

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் உயிரிழந்த மாவோயிஸ்ட் தலைவர் பசவ ராஜுவின் மரணம், அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பின் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகளுக்கு இடையிலான ஒரு பாலமாக அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் உயிரிழந்த மாவோயிஸ்ட் தலைவர் பசவ ராஜுவின் மரணம், அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பின் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகளுக்கு இடையிலான ஒரு பாலமாக அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Basava Raju

கடந்த செவ்வாய்க்கிழமை அபூஜ்மத் பகுதியில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 70 வயதான பசவ ராஜு,  தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், மாவோயிஸ்டின் அடையாளமாக இருந்தார். ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த இவர், வாரங்கலில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லூரியின் மாணவர் ஆவார்.

Advertisment

 

 

Advertisment
Advertisements

“அவர், ஆர்.இ.சி வாரங்கல் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். ரேடிக்கல் மாணவர் சங்கத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிட்டார்,” என்று தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு உயர் உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். அந்த நேரத்தில், வாரங்கல் முழுவதும் இது போன்ற அமைப்புகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது. 1980களில் அவர்களின் முக்கிய ஆட்சேர்ப்புகளில் இவரும் ஒருவர்” என்று தெலங்கானா அதிகாரி கூறினார். பசவ ராஜுவின் இயற்பெயர் நம்பள கேஷவ ராவ் என்று கூறப்படுகிறது. 

பசவ ராஜு 1985 இல் தலைமறைவாகச் சென்றதாக நம்பப்படுகிறது. “அவர், அதிலிருந்து முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, மக்கள் போர்க் குழுவில் (People’s War Group - PWG) பதவி உயர்வு பெற்றார்” என்று அந்த அதிகாரி கூறினார். 2004 ஆம் ஆண்டில், மக்கள் போர்க் குழுவும் (PWG) மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டரும் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆக உருவானது.

தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் கருத்துப்படி, பசவ ராஜுவின் மரணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) க்கு ஒரு பெரிய பின்னடைவு. ஏனெனில், அவர் தடைசெய்யப்பட்ட அமைப்பின் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகளுக்கு இடையிலான இணைப்பாக இருந்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கணபதி அல்லது முப்பலா கேசவ ராவ் விலகிய பிறகு, பசவ ராஜு அந்தப் பொறுப்பை ஏற்றார்.

“கணபதி (70), ஒரு காலத்தில் நக்சல்பாரியை கட்சியின் தெற்குப் பிரிவுடன் இணைத்தவர் என்று அறியப்பட்டார். கட்சியை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அவர் பயணம் செய்ததாக அறியப்பட்டது. பசவ ராஜு அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்” என்று மற்றொரு தெலங்கானா மாவோயிஸ்ட் தடுப்பு போலீஸ் அதிகாரி கூறினார்.

பசவ ராஜு ஒரு நாள் மேற்கு வங்கத்திலும், அடுத்த நாள் ஸ்ரீகாகுளத்திலும் கட்சிப் பணிகளுக்காக இருப்பார் என்று உள்ளூர் கதைகளில் சொல்லப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

“பசவ ராஜு, அவர்களின் சித்தாந்தத் தலைவர் மட்டுமல்ல, அவர்களின் போர் தலைவராகவும் இருந்தார். மிக இளம் வயதிலிருந்தே இயக்கத்தில் வளர்ந்தவர். அவரது மரணம் ஒரு பெரிய இழப்பாகும். இதன் காரணமாக இயக்கம் கலைக்கப்படக்கூட வாய்ப்புள்ளது,” என்று அந்த அதிகாரி கூறினார். “பசவ ராஜுவைப் போல மற்றவர்களை ஒன்றிணைக்க இயக்கத்தில் யாரும் இல்லை என்றும், அவர் இல்லாமல் மாவோயிஸ்டுகள் மீண்டும் ஒருங்கிணைவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

2011 இல் கிஷன்ஜி (மல்லோஜுலா கோடேஸ்வர ராவ்) 56 வயதில் கொல்லப்பட்ட பிறகு, தற்போது பசவ ராஜுவின் இழப்பு இயக்கத்தின் அடிப்படையை பாதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “இந்த மரணத்தால் இயக்கத்தின் மன உறுதி மிகவும் குறைவாக இருக்கும்” என்று ஒரு அதிகாரி கூறினார். கடந்த சில ஆண்டுகளாக தெலங்கானாவில் இருந்து இயக்கத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு இல்லாத நிலையில், பழைய உறுப்பினர்களின் மரணம் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆபத்தானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இந்தக் குழுவில் உள்ள மற்றவர்களை விரைவில் சரணடையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.

- Nikhila Henry

Maoist

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: