பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு பெருநகர் வரையிலான ஹைபர்லூப் பயணத் திட்டத்தின் உத்தேச சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய, விர்ஜின் ஹைப்பர்லூப் மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் இடையே முதல் வகையான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Advertisment
இந்த ஹைபர்லூப் இணைப்பு விமான நிலையத்திற்கும் நகர மையத்திற்கும் இடையிலான பயண நேரத்தை 10 நிமிடங்களாக குறைக்கக்கூடும் என்று விர்ஜின் ஹைப்பர்லூப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் பாதை ஆகியவற்றை மையமாகக் கொண்ட சாத்தியக்கூறு ஆய்வு, இரண்டு கட்டங்களாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 1,000க்கும் அதிகமான கிமீ வேகம் வரை பயணிக்கும் இந்த ஹைபர்லூப், பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நகர மையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகளை 10 நிமிடங்களுக்குள் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் கபில் மோகன் முன்னிலையில், விர்ஜின் ஹைப்பர்லூப் மற்றும் டிபி வேர்ல்ட் தலைவர் சுல்தான் பின் சுலாயீம், முதன்மைச் செயலாளர் விஜய் பாஸ்கர் இடையே, மெய்நிகர் கூடத்தின் மூலம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
"நெரிசலைக் கையாள்வதற்கும், பெங்களூர் பெருநகர பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திடம் ஒன்றாய் செயல்படுவதை நாங்கள் பெருமையாக எண்ணுகிறோம் ”என்று சுல்தான் பின் சுலாயீம் கூறினார்.
"ஹைபர்லூப் பயணத் திட்டம் மகத்தான பொருளாதார திறனை வழங்குகிறது, முன்னோடியில்லாத வேகத்தில் மக்களை இணைக்கிறது" என்று விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி ஹரி மரார் கூறினார்.
இந்தியாவில், பல்வேறு நிறுவனங்கள் ஹைபர்லூப் பயணத் திட்டங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. மும்பை-புனே, அமராவதி-விஜயவாடா வழித்தடங்கள் தற்போது முன்னணி திட்டங்கள் உள்ளன.