பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடி கட்டடம், கனமழையின் காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bengaluru building collapse: Toll rises to 5, search operations to rescue trapped workers continue
இதன் இடிபாடுகளில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை இணை ஆணையர் தேவராஜ் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில், அர்மன், திரிபால், முகம்மது சாஹில், சத்ய ராஜூ மற்றும் சங்கர் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில், அர்மன், திரிபால் மற்றும் முகம்மது சாஹில் ஆகியோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து அவர் கூறுகையில், "மதிய உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டடம் சரிந்து விழத் தொடங்கியது. நான் சக தொழிலாளர்களைக் இறுகப்பற்றிக் கொண்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டேன்", எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விபத்து நடைபெற்ற இடத்தை கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், மேம்பாட்டு துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் நேரில் பார்வையிட்டார். அப்போது, கட்டடத்தின் கட்டுமான பணிகளில் விதிமுறை மீறல்கள் இருந்ததாக மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், சம்பவம் குறித்து அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், இந்நிகழ்வில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாக தெரிவித்தார். மீட்பு பணிகள் முழுமையடைந்த பின்னர், விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், பெங்களூருவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தொழிலாலர் நலத்துறை அமைச்சர் சந்தோஷும் விபத்துக்குள்ளான கட்டத்தை ஆய்வு செய்தார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட இடத்தில் 4 மாடிக் கட்டடம் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் 6 மாடிக் கட்டடங்களை கட்டியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பைரதி பசவராஜ் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முனிராஜு ரெட்டி என்பவர் கட்டடத்தின் உரிமையாளர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவரது மகன் மோகன் ரெட்டி என்பவர் மல்லேஷ்வரம் பகுதியில் தங்கியிருந்து கட்டுமான பணிகளை பார்வையிட்டது தெரியவந்துள்ளது.
போலீசார் அளித்த தகவலின் படி, கட்டடம் விபத்துக்குள்ளான போது 21 பேர் அதில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“