அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. அவ்வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி முதன்முறையாக நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், தி.மு.க., ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
எதிர்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டது. அதன்படி, பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 3-வது எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையிலும், 4-வது கூட்டம் தமிழ்நாட்டிலும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
எதிர்க் கட்சிகள் கூட்டம் நடந்த 10 நாட்களுக்குள், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் காங்கிரஸ் இடையே உள்ள மோதல் இன்னும் தீர்ந்தபாடில்லை. இது 26-கட்சி கூட்டணிக்குள் இன்னும் பல சிக்கல்களை உருவாக்கும் என்பதைக் குறிக்கிறது.
சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பெங்கால் காங்கிரஸ் தலைவரும், மக்களவையில் கட்சியின் தளத் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தா பானர்ஜி தலைமையிலான டி.எம்.சி-யை கடுமையாக சாடினார். “அவர் (மம்தா) 2011ல் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார். அப்போது அவர் அதை மறுத்தார். மாநில மக்கள் தற்போது மம்தா பானர்ஜி மீது ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, அவர் இப்போது காங்கிரஸுடன் கைகோர்க்க வேண்டும் என்று நினைத்தார். திரிணாமுலுக்கு இப்போது காங்கிரஸ் தேவையாக இருக்கிறது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஒட்டுமொத்த நாட்டையும் ஒன்றிணைத்துள்ளது. ராகுல் காந்தியின் தலைமை இந்தியா முழுமைக்கும் மாற்றத்திற்கான தெளிவான அறிகுறியாகும். ராகுல் காந்தியின் அரசியலில் சேராவிட்டால், கட்சி பிளவுபடும் என்பதை திரிணாமுல் காங்கிரஸ் உணர்ந்துள்ளது." என்று கூறினார்.
கூட்டணியை மனதில் வைத்துக்கொண்டு காங்கிரஸை பதிலுக்கு டி.எம்.சி தாக்கி பேசப்போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாந்தனு சென் பதிலளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் டி.எம்.சி 180 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த எண்ணிக்கை இன்னும் கூடிவிட்டது, ஆனால் 2011ல் காங்கிரஸ் பூஜ்ஜியமாகிவிட்டது. கூட்டணியை மனதில் வைத்துக்கொண்டு காங்கிரஸை நாங்கள் தாக்கி பேசப்போவதில்லை. அதற்காக நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போராடும் அளவுக்கு நாங்கள் பலமாக உள்ளோம். எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.” என்று கூறினார்.
மம்தாவும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும் சி.பி.ஐ(எம்) மற்றும் பா.ஜ.க-வை தாக்கி பேசியபோதும் காங்கிரஸைப் பற்றி பேசாமல் இருந்த டி.எம்.சி-யின் வருடாந்திர தியாகிகள் தின பேரணிக்கு ஒரு நாள் கழித்து இந்த அறிக்கைகள் வந்துள்ளன. மம்தா தனது உரையில், "நாங்கள் அதிகாரம் அல்லது பதவியைப் பற்றி கவலைப்படுவதில்லை, எங்கள் தேசத்தின் அமைதிக்காக நாங்கள் கவலைப்படுகிறோம்." என்று கூறினார்.
இந்த நிலவரத்தை உற்று கவனித்து வரும் மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி, “இந்த (டி.எம்.சி) அரசாங்கத்திற்கு எதிராக போராட விரும்புவோர், பா.ஜ.க-வுடன் வந்து போராடுங்கள். அல்லது கொடுங்கோல் அரசை எதிர்த்து நின்று போராடும் மேடையை உருவாக்குவார்கள். கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் படங்களைப் பார்த்து இந்த மாநில அரசுக்கு எதிராகப் போராட நினைத்தால் மேற்கு வங்க மக்கள் நம்ப மாட்டார்கள். அவர்கள் டெல்லியில் நட்பு பாராட்டுகிறார்கள். வங்காளத்தில் மல்யுத்தம் நடத்துகிறார்கள்'" என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil