பெங்களூரு (Bengaluru) புறநகர் பகுதியான ஹெப்பகோடியில் உள்ள ஜி.ஆர் பண்ணை வீட்டில் கடந்த 19 ஆம் தேதி இரவு, 'ரேவ் பார்ட்டி' நடந்தது. அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் (சி.சி.பி) சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, சி.சி.பி அதிகாரிகள் 15.56 கிராம் மெத்திலினெடியோக்சிமெதம்பேட்டமைன் (எம்.டி.எம்.ஏ), 6.2 கிராம் கோகோயின், 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா மற்றும் 5 மொபைல் போன்களை கைப்பற்றினர். மேலும், இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bengaluru rave party: Telugu actor Hema among 86 test positive for drugs
ரேவ் பார்ட்டி - கைது
இந்த ரேவ் பார்ட்டியில் தெலுங்கு நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், ஐ.டி. நிறுவன ஆண், பெண் ஊழியர்கள் என 101 பேர் கலந்து கொண்டதாகவும், அதில் எல்.வாசு, 35; வி ரணதீர், 43, முகமது அபுபக்கர் சித்திக், 29, ஒய் எம் அருண்குமார், 35, டி நாகபாபு, 32 ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது எலக்ட்ரானிக்ஸ் சிட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்தா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளபடி, ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரான வாசு, தனது பிறந்தநாளையொட்டி 'சன்செட் டு சன்ரைஸ் விக்டரி’ ரேவ் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் தெலுங்கு திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக தெலுங்கு நடிகை ஹேமா போதை விருந்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை ஹேமா வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் தான் பெங்களூருவில் இல்லை எனவும், தற்போது ஐதராபாத்தில் இருப்பதாகவும், தன்னைப்பற்றி வெளிவரும் செய்திகள் வெறும் வதந்தி எனவும் கூறியிருந்தார்.
அதேபோல் மற்றொரு தெலுங்கு நடிகை ஆஷா ராயும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் சம்பவத்தன்று பண்ணை வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் அங்கு போதைவிருந்து நடைபெற்றது குறித்து எனக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.
ஆனால், இந்த மது விருந்தில் நடிகை ஹேமா பங்கேற்று இருந்ததை பெங்களூரு போலீஸ் கமிஷனர் உறுதி செய்தார். ஜி.ஆர் பண்ணை வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர் வீடியோ எடுத்துள்ளார். அவர் எப்படி போனை எடுத்தார், எப்போது வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறுதி
இதற்கிடைேய பிடிபட்ட 101 பேரின் (கைதான 5 பேரையும் சேர்த்து) ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன். அதன் முடிவுகள் நேற்று வியாழக்கிழமை வெளியாகின. அதில் போதை விருந்தில் பங்கேற்றவர்களில் 86 பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது. குறிப்பாக தெலுங்கு நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷா ராய் ஆகிய 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.
ஒட்டுமொத்தமாக 59 ஆண்களுக்கும், 27 பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் (நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் உள்பட) குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். விசாரணைக்கு பின் அவர்கள் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“