/indian-express-tamil/media/media_files/2025/09/12/sadhguru-4-2025-09-12-05-03-19.jpg)
இந்த ஆண்டு ஜூன் மாதம், சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை ஏ.ஐ உருவாக்கிய டீப்ஃபேக்குகள் மூலம் தனது அடையாளத்தை தவறாக பயன்படுத்தியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். Photograph: (Photo: Sadhguru Jaggi Vasudev/Instagram)
பெங்களூருவைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவின் டீப்ஃபேக் (ஏ.ஐ உருவாக்கிய போலி) வீடியோவை பயன்படுத்தி மோசடி நபர்கள் விளம்பரப்படுத்திய போலி முதலீட்டு வாய்ப்பில் சிக்கி ரூ.3.75 கோடி இழந்துள்ளார் என போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
57 வயதான பெண், சி.வி. ராமன் நகரைச் சேர்ந்தவர். பிப்ரவரி 25 முதல் ஏப்ரல் 23 வரை சமூக வலைதளத்தில் சத்குருவின் உண்மையான வீடியோவாக தோன்றிய ஒன்றைப் பார்த்தார். டீப்ஃபேக் தொழில்நுட்பம் பற்றிய அறிவில்லாமல் அவர் அந்த வீடியோவை நம்பியுள்ளார்.
அந்தப் பெண் தனது புகாரில், “நான் சத்குருவின் வீடியோவை பார்த்தேன். அதில் அவர் ஒரு நிறுவனத்துடன் வணிகம் செய்து வருவதாகக் கூறினார். அதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது, அதை கிளிக் செய்து உங்கள் பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து 250 யூரோ தொகை செலுத்தினால் உங்கள் நிதிநிலை பெரிதும் மேம்படும்” எனக் கூறினார்.
அவர் அவ்வாறு செய்த பிறகு, “வாலீட் பி” என தன்னை அறிமுகப்படுத்திய ஒருவர் அவரை தொடர்புகொண்டார். அவர், “மிர்ராக்ஸ்” (Mirrox) என்ற நிறுவனத்தைச் சேர்ந்ததாகக் கூறினார். பிரிட்டனில் உள்ள பல தொலைபேசி எண்களை பயன்படுத்திய வாலீட், அந்தப் பெண்ணை சுமார் 100 பேர் இருந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்த்தார். பின்னர் பல இணையதளங்களுக்குச் செல்லவும், “மிர்ராக்ஸ்” பங்கு வர்த்தக செயலியை (app) பதிவிறக்கம் செய்யவும் அவர் வழிகாட்டினார்.
வாலீட் ஜூம் மீட்டிங் வழியாக வர்த்தக பயிற்சிகளை நடத்தினார். சில நாட்களுக்குப் பிறகு “மைக்கேல் சி” என்ற இன்னொருவரை மாற்று பயிற்சியாளராக அறிமுகப்படுத்தினார். போலியான லாபத் தகவல்கள், வங்கி நுழைவுத் தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்து குழுவில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் உளவியல் தந்திரங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்தினர் என்று எஃப்.ஐ.ஆர்-ல் கூறப்பட்டுள்ளது.
இந்த தந்திரங்களை நம்பிய அந்தப் பெண், குற்றவாளிகள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து பணம் மாற்றத் தொடங்கினார். ஏப்ரல் 23-க்குள், மொத்தமாக ரூ.3.75 கோடி பல பரிவர்த்தனைகளில் அனுப்பிவிட்டார். போலியான பிளாட்ஃபார்மில் அவரது முதலீட்டுக்கு அதிக லாபம் வந்ததாகக் காட்டப்பட்டது.
ஆனால், அவர் லாபத்தைத் திரும்பப் பெற முயன்றபோது தான் ஏமாந்தது தெரிந்தது. “செயலாக்கக் கட்டணம்” மற்றும் “வரிகள்” என்ற பெயரில் கூடுதல் தொகையை கோரியபோது சந்தேகம் எழுந்தது. அவர் அந்தக் கட்டணத்தை செலுத்த மறுத்ததால், மோசடிக்காரர்கள் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தனர்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை அவர் போலீசில் புகார் அளித்தார். இதனால், இழந்த பணத்தை மீட்க சிரமம் இருக்கும் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா ஃபவுண்டேஷன், ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் அவரது அடையாளம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
டீப்ஃபேக் என்றால் என்ன?
‘டீப் லேர்னிங்’ (deep learning) மற்றும் ‘பேக்’ (fake) என்ற சொற்களின் சேர்க்கைதான் ‘டீப்ஃபேக்’. ஏற்கெனவே உள்ள வீடியோ அல்லது ஆடியோவிற்கு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் போலியான டிஜிட்டல் உருவாக்கங்களை ஒட்டும் தொழில்நுட்பம்தான் இது. நரம்பு வலைப்பின்னல் (neural networks) பயன்படுத்தும் இயந்திரக் கற்றல் (machine learning) மாதிரிகள் மூலமாக டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
2024 ஜனவரியில் நடிகை ராஷ்மிகா மந்தன்னாவின் டீப்ஃபேக் வீடியோ வைரலானது. அதனை உருவாக்கிய ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியாளர் ஈமானி நவீனை போலீசார் கைது செய்தனர்.
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஆகியோரும் சைபர் குற்றவாளிகளால் டீப்ஃபேக் வீடியோவில் பயன்படுத்தப்பட்ட முக்கிய நபர்களில் சிலர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.