Avaneesh Mishra
Bipin Rawat On last visit to his Uttarakhand: உத்தரகாண்ட் மாநிலம் பௌரி கர்வால் மாவட்டத்தில் உள்ள சைஞ்ச் என்ற குக்கிராமத்தில் பிறந்த் பிபின் ராவத்தின் குடும்பம் ஒரு ராணுவ குடும்பம். அவருடைய தந்தை லக்ஷ்மன் சிங் ராவத் ராணுவத்தில் லெஃப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சைஞ்ச் உயரமான பகுதியில் அமைந்திருப்பதோடு மாவட்ட தலைநகரில் இருந்து 42 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. யாம்கேஷ்வரில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 21 வீடுகளில் 93 நபர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துவிட்டனர்.
தன்னுடைய இந்த குக்கிராமத்தில் பிபின் அதிக நாட்கள் செலவிடவில்லை. தன்னுடைய பள்ளி படிப்பிற்காக டேராடூனுக்கு சிறிய வயதிலேயே சென்றுவிட்டார். டேராடூனில் உள்ள காம்ப்ரியன் ஹில் ஸ்கூலில் படித்த அவர் சிம்லாவில் உள்ள புனித எட்வர்ட் பள்ளியில் மேற்படிப்பை முடித்தார். பிறகு புனேவின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தில் படித்தார். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடெமியிலும் படித்தார் அவர்.
முப்படைத் தளபதி ராவத்தின் மனைவி மதுலிக்கா மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா பகுதியை சேர்ந்தவர். இவ்விருவரின் தந்தைகளும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். உற்ற நண்பர்களும் கூட.
யாம்கேஷ்வர் எம்.எல்.ஏ. ரித்து கந்தூரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, பிபினால் பௌரி கர்வால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பௌரிக்கு வந்த அவர் தன்னுடைய கிராமத்தினர் பயனடையும் வகையில் சாலைகளை அமைத்துக் கொடுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
இந்த கிராமத்தில் அவருடைய உறவினர்கள் யாரும் வாழவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தை பார்வையிட்ட அவர் இங்கு சாலைகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பிறகு நாங்கள் 4.5 கி.மீ நீள சாலை அமைக்க துவங்கினோம். 3.5 கி.மீ நீள சாலை அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் சில நிலம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக முழுமை அடையவில்லை என்றும் கந்தூரி தெரிவித்தார்.
உத்தரகாண்டின் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்த ராவத் ராணுவத்தின் மிக உயரிய பதவிகளை தன்னுடைய திறமையால், உழைப்பால், வீரத்தால் அலங்கரித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்திற்கு புதிய வழியை காட்டினார் அவர். அவருடைய மரணம் உத்தரகாண்டிற்கு மிகப்பெரிய பேரிழப்பாக அமைந்துள்ளது என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil