இ.பி.எஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏ உடன் கூட்டணி இல்லை: தினகரன் திட்டவட்டம் - பா.ஜ.க முயற்சிக்கு முட்டுக்கட்டை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க-வை எதிர்கொள்ள அ.தி.மு.க-வின் பிரிவுகளை ஒன்றிணைக்க பா.ஜ.க. தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், ஓ.பி.எஸ்ஸும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க-வை எதிர்கொள்ள அ.தி.மு.க-வின் பிரிவுகளை ஒன்றிணைக்க பா.ஜ.க. தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், ஓ.பி.எஸ்ஸும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TTV Dhinakaran 5

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) மீண்டும் இணைவதற்கு வாய்ப்பில்லை எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். Photograph: (Express)

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) மீண்டும் இணைவதற்கு வாய்ப்பில்லை எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படுத்துவதற்கான பா.ஜ.க-வின் முயற்சிகள் பெரிய அளவில் முன்னேற்றம் காணாமல் முடங்கியுள்ளன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, டி.டி.வி. தினகரனைச் சந்தித்துப் பேசினார். என்.டி.ஏ. கூட்டணிக்குத் திரும்புவது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் 1 மணி நேரம் பேசிய நிலையில், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும், அண்ணாமலை தன்னை ஒரு நண்பர் என்ற முறையில் சந்தித்ததாகவும் டி.டி.வி. தினகரன் புதன்கிழமை தெரிவித்தார். ஆனால்,  “பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏ. கூட்டணியில் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

முன்னாள் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலாவின் சகோதரியின் மகன் டி.டி.வி. தினகரன் ஆவார். 2024 மக்களவைத் தேர்தலின்போது, டி.டி.வி. தினகரனை என்.டி.ஏ-வின் வசம் கொண்டு வருவதில் அண்ணாமலை முக்கியப் பங்கு வகித்தார்.

தற்போது டி.டி.வி. தினகரனுடனான அண்ணாமலையின் சந்திப்பு, தலைமைப் பிரச்னை தீர்க்கப்பட்டால் அ.ம.மு.க. மீண்டும் என்.டி.ஏ-வில் சேருமா என்பதைக் கண்டறியும் நோக்கத்தில் அமைந்ததாக பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

Advertisment
Advertisements

இ.பி.எஸ்-ஐ எதிர்ப்பதில் டி.டி.வி. தினகரன் உறுதியாக உள்ளார், ஆனால், ஊடக சந்திப்பில் டி.டி.வி. தினகரன் இதை முழுவதுமாக மறுத்தார்: “2021 சட்டமன்றத் தேர்தலிலும் நான் பழனிசாமிக்கு எதிராகத்தான் இருந்தேன். சில மூத்த தலைவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டதால்தான் அப்போது நான் ஏற்றுக்கொண்டேன்.” என்றார்.

அது மட்டுமல்லாமல், இ.பி.எஸ். 'துரோகம்' செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய டி.டி.விதினகரன், அவரைத் தோற்கடிப்பதற்கென்றே தன் கட்சிப் போராடும் என்றும் கூறினார். இதற்கான தனது காரணங்களை 'டெல்லி தலைவர்களிடம்' (பா.ஜ.க.வை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்) விளக்கியதாகவும் அவர் கூறினார்.  “டெல்லியை மையமாகக் கொண்ட தூதுவர்கள் மூலம் என்னைத் திரும்பக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. ஆனால், நான் அவற்றை நிராகரித்துவிட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

தி.மு.க-வுடனோ அல்லது சீமானின் நாம் தமிழர் கட்சியுடனோ (நா.த.க) சேர வாய்ப்பில்லை என்று கூறிய டி.டி.வி. தினகரன், மற்ற வாய்ப்புகள் திறந்தே இருப்பதாகக் குறிப்பிட்டார்.  “நாங்கள் இணையும் கூட்டணி வெற்றி பெறும் கூட்டணியாக இருக்கும்” என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

ஓ.பி.எஸ்-ஸும் இதே நிலைப்பாடு

பா.ஜ.க மீண்டும் என்.டி.ஏ-வில் கொண்டு வர முயற்சிக்கும் மற்றொரு முன்னாள் அ.தி.மு.க. தலைவரான ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.), இ.பி.எஸ். தொடர்ந்து முதன்மை அதிகாரத்தில் இருக்கும் வரை கூட்டணியில் சேரத் தயக்கம் காட்டுகிறார்.

எனினும், அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் அழைத்தால் அவரைச் சந்திப்பேன் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

முன்னாள் தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் 10 நாள் 'காலக்கெடு' விதித்ததால், சமீபத்தில் இ.பி.எஸ்-ஆல் அவர் கட்சிப் பதவிகள் அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டார். டி.டி.வி. தினகரனும் செங்கோட்டையனும் சந்தித்ததாகச் சில தகவல்கள் வந்தன, ஆனால் இருவரும் அதை மறுத்துள்ளனர்.

ஓ.பி.எஸ்., அ.தி.மு.க. குறித்துக் கருத்துச் சொல்லாமல், விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) செல்வாக்கு குறித்து சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டார்.  “அவருடைய பேரணிகளில் கூடும் பெரிய கூட்டங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆனால் அவை வாக்குகளாக மாறுமா என்பது வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னரே தெரியவரும்” என்றும் அவர் கூறினார்.

செங்கோட்டையன் கட்சிக்குள் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் இணைக்கும் காலக்கெடுவை அவர் அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. செங்கோட்டையன் பா.ஜ.க-வின் ஆசீர்வாதத்துடன் செயல்படுகிறார் என்ற ஊகத்திற்கும் இது வழிவகுத்தது.

செங்கோட்டையன் தனது நிலைப்பாடு மாறவில்லை என்று கூறியுள்ளார்: “அனைவரும் ஒன்றிணைந்தால், 2026-ல் அ.தி.மு.க. மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய முடியும்.” அத்துடன் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளிடையே தனக்கு ஆதரவு இருப்பதாகவும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வின் நிலைப்பாடு

செங்கோட்டையனின் 10 நாள் காலக்கெடு கட்சிக்குள் எந்தப் பெரிய சலசலப்பையும் ஏற்படுத்தாததால், இ.பி.எஸ். அ.தி.மு.க.வின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியை பா.ஜ.க பெற்றதாகத் தெரிகிறது.

சமீபத்தில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்குப் பேட்டி அளித்த ஒரு மூத்த தலைவர், பா.ஜ.க. தவறான குதிரை மீது பந்தயம் கட்டியதாகக் குறிப்பிட்டார். “புரட்சியின் முகமாக அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் தவறு செய்துவிட்டனர்” என்றும் அவர் கூறினார்.

ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதால், என்.டி.ஏ-வின் கூட்டணிக் கட்சிகள் பலவீனமாக இருப்பதாலோ அல்லது கூட்டணியை விட்டு வெளியேறியதாலோ, பா.ஜ.க. கூட்டணிக்குக் குடை விரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. பா.ம.க-வில் ராமதாஸ் தந்தையும் மகனும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது, பிரேமலதா விஜயகாந்த்தின் தே.மு.தி.க. அதிருப்தியில் உள்ளது, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால், தமிழகக் கூட்டணியில் பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் மட்டுமே இரண்டு முக்கியக் கூட்டணிக் கட்சிகளாக உள்ளன.

கடந்த வாரம், இ.பி.எஸ் டெல்லியில் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க-வின் தலைவர்களைச் சந்தித்து, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். மீண்டும் கட்சிக்குள் வருவதில் தனக்கு உள்ள உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் வாரிசாகத் தனது பங்கை நிலைநிறுத்தப் போராடிய அவர், இருவரையும் தனக்குப் போட்டியாளர்களாகவே பார்க்கிறார்.

அ.தி.மு.க-வின் மூலம் இல்லாமல், என்.டி.ஏ. கூட்டணியின் மூலம் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனை உள்ளிழுப்பதே ஒரு வழியாக இருக்கும் என்று இ.பி.எஸ். பரிந்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தி.மு.க., செங்கோட்டையனின் கருத்துகளை, அ.தி.மு.க-வை பா.ஜ.க-வே இயக்குகிறது என்பதற்கான கூடுதல் "ஆதாரமாக" எடுத்துக் கொண்டதாலும், அ.தி.மு.க.வின் சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்கு பா.ஜ.க.வுடனான அதன் "உறவு" ஒரு காரணம் என்று நம்பப்படுவதாலும், இந்த விஷயத்தில் இ.பி.எஸ். தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்பில்லை.

Ttv Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: