பாஜக.வுக்கு டெல்லியில் நவீன வசதிகள் உடைய புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இன்று திறந்து வைத்தனர்.
பாஜக.வுக்கு டெல்லியில் நவீன வசதிகளுடன் சொந்தமாக புதிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது நெடுநாள் கனவு. அது இப்போது கூடி வந்திருக்கிறது. டெல்லி அசோக் சாலையில் பா.ஜ.க.வின் தலைமை அலுவலகம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இடப்பற்றாக்குறை மற்றும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அக்கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் கட்ட கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
பாஜக புதிய அலுவலகம், டெல்லி தீன்தயாள் உபாத்தியா மார்க்கில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை பிரதமர் மோடி, அக்கட்சித்தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று (பிப்ரவரி 18) திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முழுவதும் வைபை வசதிகளை கொண்ட இந்த கட்டிடம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நூலகம், வீடியோ, கூட்ட அரங்குகள், தங்கும் விடுதி என பல வசதிகளை இக்கட்டிடம் கொண்டுள்ளது. பாஜக தொடர்பான முக்கிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். சில நாட்களில் முழுமையாக பழைய அலுவலகத்தில் இருந்து இங்கு மாறிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.