/indian-express-tamil/media/media_files/uFK3aFlbafO25nufvKDN.jpeg)
Narayanasamy
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், நில அபகரிப்பு, கஞ்சா நடமாட்டம், பெண்கள் மீதான பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
திங்கட்கிழமை (மே 26) புதுச்சேரியில் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், உமாசங்கர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று நாராயணசாமி வலியுறுத்தினார். பாஜக எம்.எல்.ஏ. செந்தில்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணையில் எந்த கட்டத்தில் உள்ளது என்பது குறித்து தகவல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். உமாசங்கர் வழக்கையும் சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்தும் புதுச்சேரி அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றார்.
புதுச்சேரி காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை என பாஜக எம்.எல்.ஏ.க்களும், ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், நில அபகரிப்பு, கஞ்சா நடமாட்டம், பெண்கள் மீதான பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
போலி மதுபான உற்பத்தி மற்றும் நில அபகரிப்பு
வில்லியனூர் உளவாய்க்காலில் நடைபெற்ற போலி மதுபான உற்பத்தி குறித்து விசாரணை கோரியதற்கு, தமிழக அரசு விசாரிப்பதாக பதிலளிப்பதாக நாராயணசாமி தெரிவித்தார். தமிழக அரசு மது கடத்தல் மற்றும் போலி மதுபான உற்பத்தி தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது, புதுச்சேரி கலால்துறை என்ன செய்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியில் கள்ளத்தனமாக மதுபானம் தயாரித்ததாக தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்த இடம் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் உறவினருக்கு சொந்தமானது என்பதால், புதுச்சேரி அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கலால்துறை ஏன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை என்றும், கள்ளத்தனமாக மதுபானம் தயாரித்தவர்கள் மற்றும் நிலத்தை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் உறவினருக்கு சொந்தமான இடம் என்பதால், இந்த வழக்கை நீதிபதி கண்காணிப்பில் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்றும், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர் ராஜினாமா செய்யும் வரை காங்கிரஸ் போராட்டம் தொடரும் என்றும் நாராயணசாமி கூறினார். அதே இடத்தில் சந்தன கடத்தலும் நடைபெற்றுள்ளதாகவும், தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் 6 டன் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.