நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றி, கட்சி எம்.பிக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை மக்களவை கூடியபோது, சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் அமர்ந்திருந்த ஆஸ்திரியா நாடாளுமன்றக் குழுவை வரவேற்றார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே பிரதமர் நரேந்திர மோடி அவைக்குள் வந்தார்.
அவரை பார்த்ததும், அலிகார் எம்பி சதீஷ் குமார் கவுதம் எழுந்து நின்று பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்க மேஜையை தட்டினார். தொடர்ந்து, மற்ற எம்.பிக்களும் அவருடன் இணைந்து மேஜையை தட்டி ஆதரவை தெரிவித்தனர். அப்போது, அனைத்து பாஜக எம்.பிக்களும் மோடி மோடி மோடி என கோஷம் எழுப்ப தொடங்கினர். மோடி அலை கோஷத்தால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் திகைத்தனர். பின்னர், சபாநாயகர் தனது வரவேற்பு உரையைத் தொடர்ந்ததையடுத்து, கோஷம் முடிவுக்கு வந்தது.
ஸ்டாரான பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பகவந்த் மான் திங்கள்கிழமை மக்களவையில் நட்சத்திரமாக வளம் வந்தார். அவர் தனது ஸ்டார் முத்திரையான மஞ்சள் தலைப்பாகையுடன் சபைக்குள் நுழைந்தார். அமர்வு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பு, மேஜையில் அமர்ந்தார். உடனடியாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்றனர். பின்னர், அவர் உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி தலைவர் எதிர்க்கட்சிகளின் முன் வரிசைக்கு சென்று அங்குள்ள எம்.பி.க்களை வரவேற்றார். அவர், தேசிய காங்கிரஸ் தலைவர் பரூக் அப்துல்லாவின் பாதங்களை தொட்டு ஆசிபெற்றார். சங்ரூர் எம்.பி.யாக இருந்த மான், தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார்.
அவை நாகரிகம்
மக்களவையில் ஒழுக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சபாநாயகர் ஓம் பிர்லா, திங்கள்கிழமை பல எம்.பி.க்கள் தங்கள் உரையை முடித்து விட்டு வெளியேறுவதைக் கண்டு அமைதி இழந்தார்.
ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க முயன்றார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய பிர்லா, அவர்களின் பேச்சுக்குப் பிறகு காணாமல் போனவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தெரிவித்தார். சபாநாயகர் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிர்லா, அவைக்கு வரும் எம்.பி.க்கள் சபையில் இருக்க வேண்டும் என்கிற உத்தரவு இருக்கும் வகையில், அவைத் தலைவர்களுடன் கலந்தாலோசிப்பேன் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil