Advertisment

ஞானவாபி மசூதி உத்தரவு.. பா.ஜ.க-வின் வரவேற்பு.. அடுத்து மதுரா? காசி என சூசகம்!

ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து தெய்வ வழிபாட்டுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஐந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நீதிமன்ற உத்தரவுக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஞானவாபி மசூதி உத்தரவு.. பா.ஜ.க-வின் வரவேற்பு.. அடுத்து மதுரா? காசி என சூசகம்!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, 'வீடியோ'வாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது மாவட்ட நீதிமன்றம் முதலில் விசாரணை நடத்தி வந்தது.

இந்து பெண்கள் தரப்பு வாதம், மசூதி தரப்பு வாதம் என இருதரப்பு வாதங்களையும் கேட்ட வாரணாசி மாவட்ட நீதிமன்றம், இந்து தெய்வ வழிபாட்டுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஐந்து பெண்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது என உத்தரவிட்டது. இந்தநிலையில், ஞானவாபி மசூதி உத்தரவுக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு குறித்து உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தனது ட்விட்டர் பக்கத்தில், "நீதிமன்றத்தின் உத்தரவு பெரிய செய்தியை தருகிறது. அடுத்ததாக மதுரா மற்றும் காசி என சூசகமாக தெரிவித்தார். மேலும், சத்யம் சிவம் சுந்தரம்…. பாபா விஸ்வநாத் ஜி மா சிருங்கார் கவுரி மந்திர் விவகாரத்தில் மாண்புமிகு நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். இந்த முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரச்சனை தொடக்கத்தின் போது ஜூன் 2 அன்று கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஏன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். ஞானவாபி மசூதி தொடர்பாக ஆர்எஸ்எஸ் எந்த பேரணியையும் நடத்த போவது இல்லை, இதற்கு ஆதரவாக இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து கூறுகையில், "ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரச்சினையை எழுப்பக் கூடாது. ஏன் சண்டைகள் அதிகரிக்க வேண்டும்? ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்? மசூதிகளில் நடப்பதும் ஒரு பிரார்த்தனை வடிவம் தான். சரி, இது வெளியில் இருந்து வந்தது தான். ஆனால் அதை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் வெளியாட்கள் அல்ல. இதை புரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் பிரார்த்தனை வெளியில் இருந்து வந்ததாக இருந்தாலும், அவர்கள் தொடர விரும்புகிறார்கள். அது ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் எந்த விதமான வழிபாட்டையும் எதிர்க்கவில்லை" என்று கூறினார்.

உ.பி மற்றொரு முதல்வர் பிரஜேஷ் பதக் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "உ.பி அரசு நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறது மற்றும் மதிக்கிறது. நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். உ.பி.யில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவோம். சட்டம், ஒழுங்கை பாதுகாப்போம்" என்று கூறினார்.

இந்த தீர்ப்பில் பாஜக ஏன் உற்சாகமாக இருக்கிறது என்று கேட்டதற்கு, உ.பி.யின் மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில் “இந்த விவகாரத்தில் விசாரணை சில ஆண்டுகளுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை, பின்னர் உச்ச நீதிமன்றம் வரை செல்லும். அந்த காலக்கட்டத்தில் பல தேர்தல்கள் நடக்கும். ஞானவாபி மீதான நீதிமன்ற உத்தரவு, உண்மைகள், ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகள் விவாதிக்கப்படும். அப்போது அது ஒரு வேகத்தை உருவாக்கும்" என்றார்.

அதேவேளையில் பாஜக முக்கிய தலைவர்கள் இவ்விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர். பாஜக மற்றும் அரசாங்கம் பிரதமர் மோடியின் வளர்ச்சி சித்தாந்தத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இதுபோன்ற விவகாரங்களை விஎச்பி போன்ற அமைப்புகளிடம் விட்டுவிட வேண்டும் என்கின்றனர்.

ராம ஜென்மபூமி இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த விஎச்பி அமைப்பு நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. விஎச்பியின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது, "இந்த விவகாரத்தில் முதல் தடையை தாண்டியுள்ளோம். இந்த வழக்கில் வழிபாட்டு தலங்கள் சட்டம் பயன்படாது என அறிந்திருந்தோம். வழக்கை நீட்டிக்க செய்தது. நீதிமன்றம் நிலுவையில் வைத்தது. இந்த வழக்கு உண்மைகளின் அடிப்படையில் விசாரிக்கப்படும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment