மத்தியபிரதேச மாநிலம் உதய்பூரில், 6 மாதங்களிலேயே பிறந்து வெறும் 400 கிராம் எடைகொண்ட பெண் குழந்தைக்கு மருத்துவர்கள் சுமார் ஆறு மாத காலங்கள் பல்வேறு சிகிச்சைகள் அளித்து உயிர்பிழைக்க வைத்துள்ளனர்.
திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில், பிரசவத்தின்போது தாயின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைக்கு ரத்தம் ஓட்டம் இல்லாமல்போனது. இதனால், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
இக்குழந்தை, ஆறு மாதங்களிலேயே குறைபிரசவத்தில் பிறந்ததால், வெறும் 400 கிராம் எடையுடனேயே பிறந்தது. மேலும், 8.6 இன்ச் உயரம் மட்டுமே கொண்டிருந்தது. குழந்தையின் பாதமானது, கட்டை விரல் அளவே இருந்தது. இதையடுத்து, குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்தனர். அக்குழந்தைக்கு தொடர்ந்து ரத்தம் செலுத்தப்பட்டது. அதன்மூலமே, குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏற்றப்பட்டன.
சுமார் 210 நாட்கள் கழித்து குழந்தையின் எடையானது 2.4 கிலோகிராமாக அதிகரித்தது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்து உயிர்பிழைத்த குழந்தை இதுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.