டெல்லியில் தனியார் பள்ளியொன்றில் கைப்பட்டை தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக 14 வயது சிறுவன் சக மாணவர்கள் 4 பேரால் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடகிழக்கு டெல்லியிலுள்ள காரவால் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜீவன் ஜோதி மேல்நிலை பள்ளியில் மாணவர் துஷார் குமார் (14), ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பள்ளி கழிவறையில் துஷார் குமார் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அன்றைய தினமே இக்கொலை சம்பவம் தொடர்பாக சக மாணவர்கள் நான்கு பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், கைப்பட்டை தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாகவே துஷார் குமார் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துஷார் குமார் தன்னுடைய கைப்பட்டையை சில தினங்களுக்கு முன்பு சக மாணவர் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார். அதனை திருப்பி தரும்படி துஷார் குமார் அந்த மாணவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அந்த மாணவர் அதனை திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையும் கைப்பட்டையை கேட்டிருக்கிறார் துஷார். இதனால், இரு மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மற்ற மூன்று பேரும் இணைந்துகொண்டு துஷார் குமாருடன் கைகலப்பில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, துஷார் கழிவறைக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்த அந்த நான்கு மாணவர்களும், துஷாரை சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இதுதொடர்பாக 3 மாணவர்கள் கைதாகியுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். கைதான 4 மாணவர்களும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.