Advertisment

பௌத்தம் தனி மதம்; இந்துக்கள் மதம் மாற அனுமதி பெற வேண்டும் - குஜராத் அரசு

பௌத்தம் தனி மதமாக கருதப்பட வேண்டும்; இந்து மதத்திலிருந்து புத்தம், சமணம் மற்றும் சீக்கியம் ஆகிய மதங்களுக்கு மாறுவதற்கு, மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற வேண்டும்; சுற்றறிக்கை வெளியிட்ட குஜராத் அரசு

author-image
WebDesk
New Update
buddhism

பௌத்தம் தனி மதமாக கருதப்பட வேண்டும் – குஜராத் அரசு சுற்றறிக்கை (பிரதிநிதித்துவ படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Parimal A Dabhi

Advertisment

பௌத்தம் தனி மதமாக கருதப்பட வேண்டும் என்றும், இந்து மதத்திலிருந்து புத்தம், சமணம் மற்றும் சீக்கியம் ஆகிய மதங்களுக்கு மாறுவதற்கு, குஜராத் மத சுதந்திரச் சட்டம், 2003 இன் விதிகளின்படி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் குஜராத் அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Buddhism separate religion, Hindus must seek permission to convert, says Gujarat govt circular

பௌத்த மதத்திற்கு மாறுவதற்கான விண்ணப்பங்கள் விதிகளின்படி கையாளப்படவில்லை என்பது அரசின் கவனத்திற்கு வந்ததையடுத்து, ஏப்ரல் 8 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கையில் துணை செயலாளர் (உள்துறை) விஜய் பதேகா கையெழுத்திட்டுள்ளார்.

குஜராத்தில், ஒவ்வொரு ஆண்டும், தசரா மற்றும் பிற பண்டிகைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், பெரும்பாலும் தலித்துகள் மொத்தமாக புத்த மதத்திற்கு மாறுவதைக் காணலாம்.

குஜராத் மதச் சுதந்திரச் சட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகங்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவது கவனத்திற்கு வந்துள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “... இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறுவதற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களில், விதிகளின்படி நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், சில சமயங்களில், இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறுவதற்கு, முன் அனுமதி தேவையில்லை என்று விண்ணப்பதாரர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளிடமிருந்து பிரதிநிதித்துவங்கள் பெறப்படுகின்றன,” என்று அறிக்கை கூறியது.

“முன் அனுமதி கோரி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படும் சந்தர்ப்பங்களில், அரசியலமைப்பின் 25(2) பிரிவின் கீழ், சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை இந்து மதத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளன, எனவே விண்ணப்பதாரர் (அத்தகைய) மத மாற்றத்திற்கு அனுமதி பெறத் தேவையில்லை என்று சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் தெரிவிக்கின்றன, ”என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மத மாற்றம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களில் விண்ணப்பதாரர்களுக்கு சட்ட விதிகளை போதுமான அளவு ஆய்வு செய்யாமல் அளிக்கப்படும் பதில்கள் நீதித்துறை வழக்குகளில் சிக்கல் ஆகலாம்,” என்று அறிக்கை கூறியது.

அந்தச் சுற்றறிக்கையில், “குஜராத் மத சுதந்திரச் சட்டத்தைக் குறிப்பிட்டு, புத்த மதத்தை தனி மதமாகக் கருத வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, இந்து மதத்தில் இருந்து பௌத்தம்/ சீக்கியம்/ சமண மதத்துக்கு மாறுவதற்கு மற்றொருவரை மாற்றுபவர், மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பெற வேண்டும். மேலும், மதமாற்றம் செய்பவர் குறிப்பிட்ட வடிவத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சட்ட விதிகளை விரிவாக ஆய்வு செய்த பிறகும், மாநில அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களின்படியும் மத மாற்றம் குறித்த விண்ணப்பத்தை முடிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அந்த அறிக்கை அறிவுறுத்தியது.

இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “சில மாவட்ட ஆட்சியர்கள் இந்து மதத்திலிருந்து பௌத்தத்திற்கு மத மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்களைத் தீர்மானிக்கும் போது சட்டத்தையும் அதன் விதிகளையும் தவறாகப் புரிந்து கொண்டனர். மேலும், சில மாவட்ட ஆட்சியர்கள் இந்த விஷயத்தில் வழிகாட்டுதலைக் கோரியிருந்தனர். எனவே, இந்த சுற்றறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.

குஜராத்தில், தலித்துகள் மத்தியில் புத்த மதத்திற்கு மாறும் போக்கு அதிகமாக உள்ளது. குஜராத் பௌத்த அகாடமி (GBA) மாநிலத்தில் இதுபோன்ற மதமாற்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தும் முக்கிய அமைப்புகளில் ஒன்றாகும்.

குஜராத் பௌத்த அகாடமியின் செயலாளர் ரமேஷ் பேங்கர் சுற்றறிக்கையை வரவேற்றார். “இந்தச் சுற்றறிக்கை பௌத்தம் தனி மதம் என்றும் அதற்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்தை தவறாகப் புரிந்துகொள்ளும் போது (சிலர்) நிர்வாகத்தால் குழப்பம் ஏற்பட்டது. பௌத்தம் இந்து மதத்தின் ஒரு பகுதி அல்ல என்றும், பௌத்த மதத்திற்கு மாறுவதற்கு, மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அவசியம் என்றும் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். எங்கள் கோரிக்கை (அதற்கான விளக்கத்தை வெளியிடுவது) நிறைவேற்றப்பட்டுள்ளது,” என்று ரமேஷ் பேங்கர் கூறினார்.

"எங்கள் மதமாற்ற நிகழ்வுகளில், நாங்கள் எப்போதும் நடைமுறையைப் பின்பற்றுகிறோம், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை நிரப்புவதன் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியைப் பெறுகிறோம்," என்று ரமேஷ் பேங்கர் கூறினார்.

மதமாற்ற நிகழ்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, மதமாற்றம் செய்து வைக்கும் 'தர்மகுரு' (மதத் தலைவர்) படிவத்தை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். படிவத்தில், பெயர், முகவரி, சமூகம், அவர்கள் பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களா, திருமண நிலை, தொழில், மாத வருமானம், அவர் மதம் மாறும் மதத்தை எப்போதிருந்து பின்பற்றத் தொடங்குகிறார், மதம் மாறியதற்கான காரணங்கள், மதமாற்றம் நடந்த இடம் மற்றும் தேதி மற்றும் மதம் மாற்றப்போகும் தர்மகுருவின் பெயர் போன்ற, மாற்றப்பட வேண்டிய நபரின் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டில் குறைந்தது 2,000 பேர், முக்கியமாக தலித்துகள், புத்த மதத்திற்கு மாறியதாக ரமேஷ் பேங்கர் கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் 30,483 பௌத்தர்கள் உள்ளனர், இது மாநிலத்தின் மக்கள் தொகையில் 0.05 சதவீதம் ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் அவர்களை இந்துக்களாக பதிவு செய்வதால், உண்மையான பௌத்தர்களின் எண்ணிக்கை பிரதிபலிக்கவில்லை என்று குஜராத்தில் உள்ள பௌத்தர்கள் வாதிட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி அகமதாபாத்தில் சுமார் 400 பேர் புத்த மதத்துக்கு மாறினார்கள். இதேபோல், அக்டோபர் 2022 இல், கிர் சோம்நாத்தில் சுமார் 900 பேர் புத்த மதத்திற்கு மாறினார்கள். சமீப காலங்களில் பௌத்தத்தைத் தழுவிய குஜராத்தில் இருந்து முக்கிய தலித்துகளில் 2016 உனா பொது கசையடியால் பாதிக்கப்பட்ட வஷ்ரம் சர்வையா, ரமேஷ் சர்வையா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

கவர்ச்சி, கட்டாயம் அல்லது தவறான சித்தரிப்பு அல்லது வேறு ஏதேனும் மோசடி வழிமுறைகள் மூலம் மத மாற்றத்தைத் தடுக்க குஜராத் மத சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், மாநில அரசு திருமணத்தின் மூலம் வலுக்கட்டாயமாக மத மாற்றத்தைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்தது.

இதில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் போன்ற விதிகள் உள்ளன. ஆதாரத்தின் சுமை குற்றம் சாட்டப்பட்டவர் மீது உள்ளது மற்றும் இது போன்ற விஷயங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத ஒரு அதிகாரி விசாரிக்க வேண்டும். திருத்தப்பட்ட சட்டத்தை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அங்கு வழக்கு நிலுவையில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gujarat Lord Buddha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment