இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பட்டியலின, பழங்குடியின மக்கள், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதமாக உள்ளனர். இருப்பினும், நாட்டின் காவல் படைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் 51 சதவீதம் மட்டுமே.
காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் (பிபிஆர்&டி) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்," நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், பட்டியலின பழங்குடியினர் மட்டுமே காவல் படைகளில் உரிய முறையில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதை காட்டுகிறது.
1986-ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் காவல் அமைப்புகளைப் பற்றிய தரவுகளை காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டு வருகிறது.
தரவுகளின்படி, கான்ஸ்டபிள் முதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வரை என அனைத்து பதிவிகளிலும், 2019 ஆம் ஆண்டின் இறுதி வரை 14 சதவீதம் மட்டுமே பட்டியலின மக்கள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாட்டில் பட்டியலின மக்கள் தொகை 16.6 சதவீதமாக உள்ளது.
அதே நேரத்தில், மக்கள்தொகையில் 8.6 சதவீதத்தை பங்கை கொண்டுள்ள பழங்குடியின மக்கள், காவல் படைகளில் 12 சதவீத பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். ஒப்பீட்டளவில் சிறந்த மற்றும் மிஞ்சிய அளவுக்கு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓபிசி என்று சொல்லக்கூடிய இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் மோசமாக உள்ளது. மக்கள்தொகையில் 41 சதவிகித பங்கை கொண்டுள்ள ஒபிசி வகுப்பு பிரிவு மக்கள், காவல் படைகளில் வெறும் 25 சதவிகிதம் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறையை அனைத்து மாநில அரசாங்கங்களும் பின்பற்றும் நிலையிலும், விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் என்ற குறிக்கோள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
காவல் துறை பிரிவில் போதியளவு பெண்கள் ஈடுபடுத்தப்படுவது இல்லை என்றாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் நிலைமை கணிசமாக முன்னேறியுள்ளது. காவல் படைகளில் பெண்களின் எண்ணிக்கை சுமார் 1.11 லட்சமாக இருந்த நிலையில், 2014 முதல் இந்த எண்ணிக்கை தற்போது இரு மடங்காக (2.15 லட்சம்) அதிகரித்துள்ளது . உண்மையில், 2018 வருட கணக்கை ஒப்பிடுகையில் கடந்தாண்டு பெண்களின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் மொத்த பெண்ண்கள் எண்ணிக்கையில் ( 48 % ) பெண்கள் பிரதிநிதித்துவ எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள பெண் காவலர்களின் எண்ணிக்கை 2,15,504 ஆகும்.
மேலும், நாட்டில் 3,026 பெண்களுக்கு ஒரு பெண் காவலர் என்ற விகிதத்தில் பெண் காவலர்களின் எண்ணிக்கை உள்ளது. தேசிய அளவில், போக்குவரத்து காவல் போன்ற பிற துறைகளில் பெண் காவலர்களின் எண்ணிக்கை 5,979 ஆக உள்ளது. உளவுத்துறை போன்ற சிறப்பு பிரிவுகளில், பெண் காவலர்களின் எண்ணிக்கை 3,632 ஆகும். அதே நேரத்தில் தீவிரவாத தடுப்பு மற்றும் கிளர்ச்சி தடுப்பு சிறப்பு காவல் பிரிவுகளில் இந்த எண்ணிக்கை வெறும் 516 ஆக உள்ளது.
2019 ஆண்டில், ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 195 காலவர்கள் என்ற அளவில் காவலர்களின் எண்ணிக்கை உள்ளது. 2018 ல் இந்த எண்ணிக்கை 198 ஆக இருந்தது. காவல்படைகள்- மக்கள் தொகை விகிதத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (816) சிறந்த எண்ணிக்கையில் விளங்குகின்றன. இந்த விகிதத்தில், ஜார்கண்ட் (45), பீகார் (55) ஆகிய மாநிலங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. ஒடிசா (67), அசாம் (68), ஆந்திரா (85), குஜராத் (87), உத்தரகண்ட் (95), மேற்கு வங்கம் (97) போன்ற மாநிலங்கள் கடைசி 10 மாநிலங்கள் பட்டியலில் உள்ளன.
ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 220 காவலர்கள் என்ற விகிதத்தை ஐ.நா அமைப்பு முன்மொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.