அமலாக்கத்துறை வழக்கில் விசாரணையில் உள்ள ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி வெள்ளிக்கிழமை காலை மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Businessman under ED lens dies by suicide along with wife, alleges harassment because he worked for Congress, Rahul Gandhi
மனோஜ் பர்மர் மற்றும் நேஹா ஆகியோர் தங்கள் மூன்று குழந்தைகளுடன் வியாழன் அன்று சுஸ்னரில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று இரவு தாமதமாகத் திரும்பினர், அதன் பிறகு குழந்தைகள் படுக்கைக்குச் சென்றனர். வெள்ளிக்கிழமை காலை, தம்பதியர் எழுந்திருக்காததால், மூத்த மகன் அவர்கள் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
காலை 8.30 மணியளவில் போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, ஒரு சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னைத் தாக்கியதாக குற்றம் சாட்டி, ஐந்து பக்க கடிதத்தை மனோஜ் பர்மர் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் படத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் கண்டதையடுத்து, இதுவே சோதனைக்கான காரணம் என்று அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக மனோஜ் பர்மர் கடிதத்தில் கூறியுள்ளார்.
தற்கொலைக் குறிப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, "உங்களுடன் சேர்ந்து காங்கிரஸுக்கு வேலை செய்ததால்" அமலாக்கத்துறை தன்னை துன்புறுத்துவதால் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பர்மர் எழுதியுள்ளார்
“எனது மரணத்திற்குப் பிறகு, இந்தக் குழந்தைகளின் பொறுப்பு உங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது, எனவே கட்சி அதன் ஊழியர்களுடன் நிற்கிறது என்ற செய்தி வெளிப்படுகிறது,” என்று பர்மர் எழுதியுள்ளார்.
போபாலில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை பஞ்சநாமா அறிக்கை கூறுகிறது, “முழு தேடுதலும் வளாகத்தில் இருந்த நபர்களின் மத அல்லது தனிப்பட்ட உணர்வுகளை புண்படுத்தாமல் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டது. சொத்துக்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை.”
இதுகுறித்து செஹோர் காவல் கண்காணிப்பாளர் தீபக் குமார் சுக்லா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், போலீசார் இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. "நாங்கள் விசாரித்து வருகிறோம், இறுதிச் சடங்குகளில் பிஸியாக இருந்த குடும்பத்தினரிடம் இன்னும் பேசவில்லை," என்று கூறினார்.
பர்மர் விட்டுச் சென்ற தற்கொலைக் குறிப்பின் உண்மைத்தன்மையை போலீசார் சரிபார்த்து வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் சுக்லா கூறினார். “நாங்கள் அதை தற்கொலைக் குறிப்பு என்று குறிப்பிடவில்லை. நாங்கள் விசாரிக்கும் வரை நாங்கள் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது. நாங்கள் சில ஆவணங்களை மீட்டுள்ளோம், அவை விசாரிக்கப்படும்,” என்று சுக்லா கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், “பாரத் ஜோடோ யாத்திரையின் போது மனோஜ் பர்மரின் குழந்தைகள் ராகுலுக்கு உண்டியலை பரிசாக அளித்தனர். மனோஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது... மனோஜ் கருத்துப்படி, அவர் காங்கிரஸ் ஆதரவாளர் என்பதால் அவர் மீது சோதனை நடத்தப்பட்டது. மனோஜுக்கு ஒரு வழக்கறிஞரையும் ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் மிகவும் பயந்து போன மனோஜ் இன்று காலை மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும். அமலாக்கத்துறை இயக்குனரிடம் நியாயமான விசாரணையை நான் கோருகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஆஷிஷ் அகர்வால், “மரணத்தை வைத்து அரசியல் செய்வது காங்கிரஸ்காரர்களின் பழைய கழுகு போன்ற குணம். இதை அவர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக தவறாகப் பயன்படுத்துகிறார்கள்” என்றார்.
வழக்கு
பர்மர் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த கிளை மேலாளர் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகையின்படி, பிரதான் மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சர் யுவ உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ.6 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதிகள் திருப்பி விடப்பட்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
எஃப்.ஐ.ஆரில் பர்மர் மீது மோசடி மற்றும் குற்றவியல் சதி என்று குற்றம் சாட்டப்பட்டது. கடன் தொழிலில் ஈடுபடாவிட்டாலும், போலியான கணக்குகள், பில்கள் மற்றும் டின் எண்களை அளித்து, அரசு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கில் கடன் பெற்றுத் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
செப்டம்பர் 2022 இல், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் 2017 டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரி பர்மர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது. பர்மரின் மனுவில், உள்ளூர் காவல்துறை இதேபோன்ற வழக்கை அக்டோபர் 2017 இல் தாக்கல் செய்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
சமீபத்திய ரெய்டு
டிசம்பர் 5 அன்று, அமலாக்கத்துறையின் போபால் மண்டல அலுவலகம், 2002 பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் விதிகளின் கீழ் பர்மர் மற்றும் பிறருக்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக செஹோர் மற்றும் இந்தூரில் உள்ள நான்கு வளாகங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
டிசம்பர் 7 தேதியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், அமலாக்கத்துறை கூறியது, "குற்றத்தின் வருமானத்தின் பயனாளிகள் அல்லது வங்கி மோசடி திட்டத்தில் அத்தகைய நபர்களுக்கு தீவிரமாக உதவிய மற்றும் உறுதுணையாக இருந்த முக்கிய நபர்களின் வீடுகளை இந்த சோதனைகள் குறிவைத்தன."
சோதனையின் போது, "பல்வேறு குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்கள் மற்றும் அசையா மற்றும் அசையும் சொத்துகளின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன" என்று அமலாக்கத்துறை கூறியது.
“குறிப்பிட்ட நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.5 லட்சம் வங்கி இருப்பு முடக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுடன் தொடர்புடைய நான்கு அசையா சொத்துகளையும் அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது,” என்று அமலாக்கத்துறை கூறியது.
பர்மரின் மகன், அமலாக்கத்துறை தனது தந்தை மீது "மன அழுத்தத்தை உருவாக்கியது" என்று கூறினார். பார்மரின் சகோதரரும், ஹர்ஷாபூரின் சர்பானுமான ராஜேஷ் இதை மீண்டும் வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.