குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ( CAA) எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டெல்லியில், போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளனர்.
Advertisment
சிஏஏ சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில், ஆயிரக்கணக்கான முஸ்லீம்க, பல மாதங்களாக போராட்டம் நடத்திவந்தனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக, சென்னையின் வண்ணாரப்பேட்டை பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு களேபரங்களுக்கு இடையே, அந்த போராட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டு அவர்களின் கூடாரங்கள் காலி செய்யப்பட்டன.
இந்நிலையில், டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய ஷாசாத் அலி, ஆசிப் அனீஸ் உள்ளிட்ட 50 பேர், டெல்லி மாநில பா.ஜ. நிர்வாகி நிஹாத் அப்பாஸ் முன்னிலையில், தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
நிஜாத் அப்பாஸ் கூறியதாவது, ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து 50 பேர், ஓக்லா, நிஜாமுதீன் பகுதிகளிலிருந்து மேலும் பலர் பா.ஜ., கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ.,வில் இணைந்த சமூக ஆர்வலர் ஷாசாத் அலி கூறியதாவது, சிஏஏ சட்ட மசோதா விவகாரத்தில் முடிவு வேண்டுமென்றே நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், தீர்வுக்கு பதிலாக குழப்பமே விடையாக கிடைத்தது. இந்த விசயத்தில் தீர்வு காணும்பொருட்டே, நாங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளோம். சிஏஏ சட்டத்தின் சாதக பாதகங்களை கட்சியினரிடம் விளக்கி தீர்வு காண முயல்வோம் என்று அவர் கூறினார்.
ஆசிப் அனீஸ் கூறியதாவது, நாங்கள் சிஏஏ சட்டத்திற்கு எதிராகவே போராட்டம் நடத்தினோமே தவிர, பா.ஜ., கட்சிக்கு எதிராக நடத்தவில்லை. நாங்கள் மக்கள் நலனுக்காகவே போராட்டம் நடத்தினோமே தவிர, பாரதிய ஜனதா கட்சிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில், நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil